ரேஷன் கார்டு வைத்திருக்கிறீர்களா? இந்த மாவட்டக்காரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இன்றே வேலையை முடிங்க!
காஞ்சிபுரம்: வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து தாலுக்காக்களிலும் இன்று காலை 10 மணிக்கு பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை உடனே பெற்றுக் கொள்ளலாம் என இரு மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பொது விநியோகத் துறை, விவசாய துறை, மின்சார துறை உள்ளிட்டவை சார்பில் அவ்வப்போது குறைத்தீர் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதில் கலந்து கொண்டு பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்து தீர்வு பெறலாம்.

அந்த வகையில் இன்றைய தினம் ரேஷன் கார்டுதாரர்களுக்கான குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. அதாவது வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச் செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் வட்டத்தில் கூரம், உத்திரமேரூர் வட்டத்தில் விசூர், வாலாஜாபாத் வட்டத்தில் மாகறல், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் பிள்ளைப்பாக்கம், குன்றத்தூர் வட்டத்தில் மலையம்பாக்கம் ஆகிய கிராமங்களில் பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெறவுள்ளன.
மேற்கண்ட கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைபேசி பதிவுமாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி, மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொது வினியோக திட்டத்தின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது.
இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல், குடும்ப அட்டைக்கு மனு செய்தல், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் பொது வினியோக திட்ட பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதனையும் முகாமில் தெரிவித்து தீர்வு காணலாம்.
வேலூர் தாலுகாவில் சதுப்பேரி, காட்பாடி தாலுகாவில் தீயார்குப்பம், அணைக்கட்டு தாலுகாவில் முத்துகுமரன்மலை, குடியாத்தம் தாலுகாவில் ஏரிபட்டரை, கே.வி.குப்பம் தாலுகாவில் திருமணி, பேரணாம்பட்டு தாலுகாவில் கார்கூர் ஆகிய கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் மனுதாரர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆவணங்களின் நகலுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்" இவ்வாறு வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இரு மாவட்டங்களிலும் இன்றைய தினம் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. வீட்டில் குழந்தையின் பெயரை ரேஷன் அட்டையில் சேர்க்காமல் விட்டிருந்தால் இந்த முகாம் மூலம் இன்றைய தினம் சேர்த்துவிடலாம். திருமணமானவர்களின் பெயர்களை சேர்க்கவும் அவர்களின் பெயர்களை நீக்கவும், இறந்தவர்களின் பெயர்களை நீக்கவும் இன்று மனு அளிக்கலாம். அது போல் திருமணமானவர்கள் தனியே ரேஷன் கார்டு பெற விரும்பினால் அவர்களும் விண்ணப்பங்களை தரலாம். இந்த முகாம்களுக்கு வருவோர் தேவையான ஆவணங்களுடன் வந்தால் அவை உடனே தீர்வுக்குரிய விஷயமாக இருந்தால் உடனே தீர்த்து வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications