அத்திவரதர் சிலை இருக்கும் அனந்த சரஸ் குளத்தில் மீண்டும் மத்திய நீர் வளத்துறையினர் ஆய்வு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் நீரின் தன்மையை குறித்து மத்திய நீர்வள துறையினர் இன்று மீண்டும் ஆய்வு மேற்கொண்டனர்.
Recommended Video
உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவத்தை ஒட்டி கடந்த 2019ம் ஆண்டு அனந்த சரஸ் குளத்தில் இருக்கும் நீராழி மண்டபத்தில் இருந்து அத்தி வரதர் சிலை அழைத்து வரப்பட்டு வசந்த மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டது. அதையொட்டி, ஜூலை 1 ஆம் தேதி முதல் 48 நாட்கள் உலகமெங்கும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரை சாமி தரிசனம் செய்து வழிப்பட்டு சென்றனர்.
அதன் பிறகு மீண்டும் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி அன்று அத்தி வரதர் வைபவம் முடிந்த பின் மீண்டும் அனந்தசரஸ் குளத்திலுள்ள நீராழி மண்டபத்தில் அத்தி வரதர் வைக்கப்பட்டார். இதன்பின் அத்தி வரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்த சரஸ் குளத்தை பயன்படுத்த பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதன்பின் குளத்தின் தன்மையை பாதுகாக்கவும், அசுத்தம் செய்யப்படாமல் இருக்கவும், குளத்தில் பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அவ்வழக்கில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தின் நீரின் தன்மையை அறிந்து மாவட்ட நீதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய நீர்வள ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக தேர்தல்.. பாயும் கர்நாடக பணம்.. ரூட் போடும் அரசியல் புள்ளிகள்.. சிக்கிய "ஆனேக்கல் ஆனந்த்"
இந்த உத்தரவின்படி மத்திய நீர்வளத்துறை உதவி நீர் வள ஆராய்ச்சி அதிகாரி ராஜன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அத்திவரதர் வைத்திருக்கும் அனந்தசரஸ் குளத்தில் நீரின் தன்மையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆய்வு மேற்கொண்டு சென்றனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் இன்று மத்திய நீர்வளத்துறையை சேர்ந்த 3 பேர் கொண்ட குழு அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்த சரஸ் குளத்தில் நீரின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு நீரினை சோதனை செய்தனர்.மேலும் தற்போதுள்ள நீரின் தன்மை குறித்து துல்லியமாக அறிய ஆய்வகத்தின் சோதனைக்கு அனந்த சரஸ் குளத்தில் 5 வெவ்வேறு இடங்களில் இருந்து குளத்து நீரினை மத்திய நீர்வளத்துறையினர் சோதனை பாட்டில்களில் எடுத்து சென்றனர்.