கன்னியாகுமரி: ஒரே நாளில் 100 மி.மீ. மழை பதிவு.. இன்றும் வெளுத்து வாங்கும்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவற்றால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த வாரம் மழை பெய்தது.
சென்னையில் ஒரே நாளில் 20 செ.மீ. மழை பெய்ததால் தலைநகரே வெள்ளக்காடானது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடசென்னை அருகே கரையை கடந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சென்னையில் மழை இல்லை. எங்காவது ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழை பெய்து வருகிறது.

கன்னியாகுமரி
இந்த நிலையில் கடந்த 3 தினங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குமரி மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள். ரயில் தண்டவாளங்களில் ஆற்றை போல் தண்ணீர் தேங்கியுள்ளது.

நிரம்பி வெளியேறும் நீர்
தொட்டி பாலத்தில் மழைநீர் நிரம்பி அது மேலிருந்து வெளியேறும் வரும் காட்சிகளும் நடந்துள்ளன. இந்த நிலையில் நீர்நிலைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் முல்லையாற்றில் ஒருவர் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதுவரை பேரிடர் மீட்பு குழுவினரும் போலீஸாரும் இணைந்து 755 குடும்பங்களை சேர்ந்த 2,267 பேரை மீட்டுள்ளனர். அவர்கள் 48 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

100.48 மி.மீ. மழை
ரயில் தண்டவாளங்களில் வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் நாகர்கோவில்- திருவனந்தபுரம் மற்றும் நாகர்கோவில்- திருநெல்வேலி இடையே ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குழித்துறையில் நேற்றைய தினம் தாமிரபரணி ஆற்றில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் வரத்து உள்ளது. சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 100.48 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

பாதுகாப்பு இடம்
இந்த கனமழை இன்றும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தாழ்வான இடங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. பேரிடர் மீட்பு படையினரும் போலீஸாரும் தீயணைப்பு துறையினர் என அனைத்து தரப்பினரும் தயாராக உள்ளனர். இந்த பேய மழைக்கு 29 ஆண்டுகளுக்கு பிறகு வீடுகளுக்குள் தண்ணீர் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications