கஞ்சா போதையில் காலேஜ் மாணவர்கள்! கன்னியாகுமரியில் கொட்டிக் கிடந்த கொக்கைன்! தட்டித்தூக்கிய போலீஸ்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள்களை விற்பனை செய்து வந்த 3 இளைஞர்களை இரணியல் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கிலோ கொக்கைன் போதைப் பொருள் மற்றும் ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில், தடைசெய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் அதன் பயன்பாட்டை தடுக்கும் வகையில், காவல்துறையினர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, வெளி மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்கள் தமிழகத்திற்கு கொண்டு வருவதைத் தடுக்கும் வகையில், தமிழக எல்லையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, கடத்தல்காரர்களை கையும், களவுமாக பிடித்து வருகின்றனர்.
போதை ஏறிப் போச்சு! போதைப் பொருள் டான்களுடன் கனெக்சன்! போலீசிடம் தொக்காய் சிக்கிய பிரபல நடிகை! ஷாக்!
தனிப்படைகள் அமைப்பு
மேலும், மாவட்டங்கள் தோறும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை அதிரடியாக போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை கண்டறிந்து தடுக்கும் வகையில், மாவட்ட எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
ரகசிய தகவல்
தனிப்படை போலீசார் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இரணியல் பகுதியில் போதைப் பொருட்களை சிலர் கடத்தி வந்து, பாழடைந்த வீட்டில் வைத்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வருவதாக தனிப்படைப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தனிப்படை போலீசார், இரணியல் பகுதியில் உள்ள அந்த பாழடைந்த கட்டிடத்தை சுற்றி வளைத்தனர்.
3 இளைஞர்கள் கைது
பின்னர், அந்த கட்டித்தில் பதுங்கியிருந்த 3 இளைஞர்களை, சுற்றி வளைத்து மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, விசாரணை நடத்த வேண்டிய விதத்தில் தீவிர விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அந்த இளைஞர்கள், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த அசாருதீன், மற்றும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த கபின், நரேன் என தெரிய வந்தது.
திடுக்கிடும் தகவல்
அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த அசாருதீன், கொக்கைன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கன்னியாகுமரிக்கு கடத்தி வந்துள்ளார். பின்னர், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான கபின் மற்றும் நரேனுடன் இணைந்து, இந்த பாழடைந்த கட்டிடத்தில் வைத்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்களை ரகசியமாக விற்பனை செய்து வந்தது அம்பலமானது.
கைது - போதைப்பொருள் பறிமுதல்
இதனையடுத்து, போதைப் பொருட்களை மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த 3 இளைஞர்களையும் கைது செய்த இரணியல் போலீசார், அவர்களிடம் இருந்து 2 கிலோ கொக்கைன் போதைப் பொருள், ஒரு கிலோ கஞ்சா, 25 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 5 செல்ஃபோன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள்களை விற்பனை செய்து வந்த 3 இளைஞர்களை போலீசார் செய்து, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்த சம்பவம், கன்னியாகுமரி மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.