கன்னியாகுமரியில் கடன் வாங்கியவருக்கு பயந்து குளத்தில் குதித்த பைனான்ஸ் ஊழியர்.. மறக்க முடியாத பரிசு
கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் கடன் வாங்க எந்த அளவிற்கு கஷ்டப்படுகிறார்களோ, அதைவிட அதிகமாகவே கடனை திருப்பி வாங்க, கடன் கொடுத்தவர்கள் கஷ்டப்பட வேண்டிய நிலை இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலைசெய்யும் ஊழியர், கடன் வாங்கியவரிடம், தவணை தொகையை வசூலிக்க சென்ற போது உயிருக்கு பயந்த குளத்தில் குதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் 25 வயது இளைஞர் வேலை செய்து வருகிறார் .இந்த நிதிநிறுவனத்தில் அருமனை அருகே உள்ள பகுதியை சேர்ந்த ஒருவர் கடன் பெற்று புதிய இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கினார். இதற்கு அவர் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை தவணை தொகை கட்ட வேண்டும். ஆனால் அவர் சரியாக தவணை தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் நேற்று மாலை மார்த்தாண்டம் தனியார் நிதிநிறுவனத்தில் வேலை செய்யும் 25 வயது இளைஞர் சிலருடன் சென்று தவணை தொகை கட்டாதவரின் இருசக்கர வாகனத்தினை எடுப்பதற்காக அந்த பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது வாகனத்தை எடுக்க தவணை தொகை செலுத்தாத கடனாளி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கடன் வாங்கிய அந்த இளைஞர், தவணை தொகை கேட்டு வந்த இளைஞர் உள்பட நிதி நிறுவனத்தினரை ஆவேசத்துடன் துரத்தியதாக தெரிகிறது. இதில் அங்கிருந்து தப்பிப்பதற்காக இளைஞர் ஓடினார்
அந்த இளைஞர் அருமனை சந்திப்பை அடுத்துள்ள நெடுங்குளம் சந்திப்பு வழியாக ஓடியிருக்கிறார். அந்த பகுதியில் உள்ள குளத்தில் குதித்திருக்கிறார். அந்த குளத்தில் ஆகாய தாமரை செடிகள் அதிகம் இருந்தது. இதனால் அவரால் அங்கிருந்து வெளியே வர முடியாமல் கடன் நிறுவன ஊழியர் பரிதவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து உடனே விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் குளத்தில் ஆகாய தாமரை செடிகளுக்கு இடையே சிக்கி தவித்த இளைஞர் மீட்டனர். பின்னர் அவரை அருமனை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அருமனை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தவணை தொகை கேட்டு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியரை துரத்தியதால் அவர் குளத்தில் குதித்து பரிதவித்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications