ஜாதி மாறி காதல்.. கன்னியாகுமரியில் இளைஞர் மர்ம மரணம்.. ஆணவ கொலையா? உறவினர்கள் போராட்டம்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சுரேஷ்குமார் என்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மரணம் அடைந்த சுரேஷ்குமார் வேறு ஜாதிப் பெண்ணை காதலித்து வந்த நிலையில் இது ஆணவ கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மர்மமான முறையில் மரணம் அடைந்த சுரேஷ்குமாரை அந்த பெண்ணின் உறவினர்கள் கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுரேஷ் குமார் சடலத்தை பெற்றுக்கொள்ள மறுத்து இளைஞரின் உறவினர்கள் கன்னியாகுமரியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தோவாளை பகுதியைச் சார்ந்தவர் சுரேஷ்குமார். 27 வயதான பெயின்டிங் காண்டிராக்டரான இவர் காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார்.

காதல்
ஆரல்வாய்மொழி அருகே கலை கல்லூரியில் இருவரும் படித்துக் கொண்டிருந்தபோது காதலிக்க துவங்கி உள்ளனர். இந்த விஷயம் ஏற்கனவே வீட்டில் தெரிந்து சில முறை பெண் வீட்டார் கண்டித்துள்ளனர். ஆனால் அதையும் மீறி இவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நீண்ட காலம் காதலித்து வந்த நிலையில், இருவரும் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எதிர்ப்பு
அதைத்தொடர்ந்து இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டு பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. காதலை துறந்துவிட்டு, வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பெண் வீட்டை அந்த பெண்ணை வற்புறுத்தி உள்ளனர். காதலர்களை சேர்த்துவைக்க பெண்ணின் உறவினர்கள் மறுத்ததோடு பெண்ணிற்கு தாழக்குடி பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞருடன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

போலீஸ்
திருமண ஏற்பாடு ஒரு பக்கம் வேகமாக நடந்து வந்தது. இந்த நிலையில் அந்தத் திருமணத்திற்கு சுரேஷ்குமார் இடையூறு ஏற்படுத்தி விடுவார் என எழுந்த சந்தேகத்தால் பெண்ணின் குடும்பத்தினர் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் சுரேஷ்குமார் மீது புகார் அளித்துள்ளனர்.
திருமணத்திற்கு இவர் பிரச்னையை ஏற்படுத்துவார் என்று போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் பூதப்பாண்டி போலீசார் நேற்று சுரேஷ்குமாரின் வீட்டுக்குச் சென்று விசாரணைக்கு வருமாறு அவரை அழைத்தனர். அதைத்தொடர்ந்து காவல் நிலையத்திற்கு செல்வதாக புறப்பட்ட சுரேஷ்குமார் அப்பகுதி அருகே உள்ள தென்னந்தோப்பில் சடலமாக மீட்கப்பட்டார்.

மரணம்
போலீஸ் ஸ்டேஷன் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் அருகில் அவரை தேடிய போது அவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சடலத்தில் காயங்கள் காணப்பட்ட நிலையில் சுரேஷ்குமாரின் மரணம் கொலையாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளனர்.

சடலம்
இதற்கிடையே அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறியதற்கு சுரேஷ் குமார் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிணவறையில் முன்பு சுரேஷ் குமாரின் உறவினர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் சுரேஷ்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் செய்யப்பட்டு இருக்கலாம் என்பதால் கொலைக்கு காரணமான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதன் பின்னரே சடலத்தை கைப்பற்றுவோம் என கூறினார். இதன் காரணமாக சுரேஷ்குமாரின் சடலம் தற்போது பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications