அரசு பஸ்ஸை தள்ளிவிட்ட காலேஜ் மாணவிகள்.. டிரைவர், கண்டக்டருக்கு மறக்க முடியாத பரிசு.. பறந்து வந்த ஆர்டர்
கன்னியாகுமரி : நாகர்கோவிலில் கல்லூரி மாணவிகள் பழுதாகி நின்ற பேருந்தை தள்ளிய வீடியோ வைரலான நிலையில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட 4 பேரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து பொது மேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, திங்கள் நகர், திருவட்டார், படந்தாலுமூடு, மார்த்தாண்டம் உள்பட 12 இடங்களில் அரசு பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளில் இருந்து கிராம பகுதிகளுக்குத் தேவையான பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அரசு பேருந்துகளை பொறுத்தவரை சாதாரண மழை பெய்தால் கூட குடை பிடித்து பயணம் செய்ய வேண்டிய அளவில் தான் இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேபோல் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது பேருந்து இருக்கை உடைந்து விழுவதும், பழுதாகுவது நடக்கிறது.
பல அரசு டவுன் பஸ்கள் பெரும்பாலும் பழுதான நிலையில் இருப்பதாக புகார்கள் உள்ளது. அதை மெய்பிக்கும் வகையில் அவ்வப்போது பேருந்துகள் பழுதாகி நடுரோட்டில் நிற்பதும், அதனை மாணவர்கள் அல்லது பொதுமக்கள் தள்ளுவதும் நடக்கிறது.
செல்ப் மோட்டர் இல்லாமல் பேருந்தை தள்ளி ஸ்டார்ட் செய்வது அடிக்கடி நடைபெறுவதாக பொதுமக்கள் நேரடியாக குற்றம்சாட்டி வருகின்றனர். இப்படி அடிக்கடி நடப்பதால், காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைகளுக்கு செல்லும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
அப்படித்தான் அண்மையில் நாகர்கோவிலில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்தை மாணவிகள் தள்ளிச் சென்ற சம்பவம் நடந்தது. நாகர்கோவிலில் இருந்து கடந்த வியாழக்கிழமை தனியார் கல்லூரி மாணவிகளுடன் புறப்பட்ட அரசு பேருந்து, பழைய தாலுகா அலுவலகம் அருகே பழுதாகி நின்றது.
இதையடுத்து மாணவிகள் சிறிது தூரம் தள்ளிய நிலையில் பேருந்து இயங்கத் தொடங்கியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து பழுதாகி நின்ற அரசு பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட 4 பேர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications