அண்ணாமலை பேசிய பேச்சு.. உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிய காங்கிரஸ் எம்.எல்.ஏ! “திராணி இருக்கா?” சவால்!
கன்னியாகுமரி: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது பாதயாத்திரையின்போது, குளச்சல் எம்.எல்.ஏ பிரின்ஸ் முறைகேடில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிப் பேசிய நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ் போலீசில் அண்ணாமலை மீது புகார் அளித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' எனும் பெயரில் தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் துவங்கிய அண்ணாமலையின் இந்த நடைபயணம் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைக் கடந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரியில் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை, குளச்சல் தொகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசும்போது குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் பற்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அண்ணாமலை பேசுகையில், "குளச்சல் தொகுதி எம்எல்ஏ பிரின்ஸ், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தருடன் இணைந்து முறைகேடாக பதவிகளை விற்பதாக திமுக பிரமுகரே குற்றம்சாட்டியுள்ளார்" எனப் பேசினார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து, குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ், கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன் மீது உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற குற்றசாட்டுகளை முன்வைத்து தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசி வருகிறார் என்றும், இது குறித்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களே, நான் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் முறைகேடு செய்திருப்பதாக கூறியிருக்கிறீர்கள். உங்களுக்கு திராணியிருந்தால் நீங்கள் கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா? இல்லையேல், மேலும் அரசியல் சில்லறைத்தனம் செய்யாமல் பதவி விலக தயாரா?" என சவால் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications