பாத யாத்திரையை தொடங்கி வைத்த முதல்வர்.. ”சகோதரர்” ஸ்டாலினுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய ராகுல்!
கன்னியாகுமரி: இந்திய ஒற்றுமை யாத்திரியை தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'ஒற்றுமைக்கான பயணம் ' என்ற பாத யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கி உள்ளார். நாடு முழுவதும் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் 3, 570 கிமீ தூரத்திற்கு யாத்திரையை மேற்கொள்கிறார்.
இதில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர்கள் 120 பேர் நடைபயணம் மேற்கொள்கின்றனர். இதனை கன்னியாகுமரியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர்.

ராகுல் காந்தி பேச்சு
இதனைத்தொடர்ந்து இந்திய ஒற்றுமை பாதயாத்திரை தொடக்க விழாவில் ராகுல் காந்தி பேசுகையில், அழகான தமிழ்நாட்டுக்கு வருவது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மூன்று சமுத்திரமும் சங்கமிக்கும் இந்த இடத்தில் தேச ஒற்றுமைக்கான பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி. நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என்று மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

பாஜகவுக்கு கவலையில்லை
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆகியவற்றால் தேசியக் கொடியே அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. நாட்டின் எதிர்காலத்தை பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமே தீர்மானிக்கும் என்று நினைக்கிறார்கள். இந்திய மக்களை மோதவிட்டு லாபம் பார்த்த ஆங்கிலேயர் ஆட்சியைப் போன்றே மோடியின் ஆட்சியும் நடக்கிறது. ஏழை மக்களைப் பற்றி பாஜக அரசு சிறிதும் கவலைப்படுவதில்லை. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் வேளாண் சட்டங்களை ஆகியவை முதலாளிகளுக்கு சாதகமாகவே நிறைவேற்றப்பட்டன.

காங்கிரஸ் எண்ணம்
நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்துவதே காங்கிரஸ் நடைபயணத்தின் நோக்கம். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் போல் மக்களை பிரித்தாள் காங்கிரஸ் கட்சி நினைக்கவில்லை. மக்களின் கருத்துகளை கேட்டறியவே விரும்புகிறோம்.

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமைப் பயணத்தை தொடங்கி வைத்து வாழ்த்து கூறிய தமிழக முதலமைச்சரும், சகோதரருமான மு.க.ஸ்டாலினுக்கு எனது நன்றி. தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் திரும்பிச் செல்கிறேன் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications