காதலிக்கு திருமணம் நடப்பதாக நினைத்து.. வேறு திருமண வீட்டில் ரகளை.. போதை இளைஞரால் பரபரத்த குமரி!
கன்னியாகுமரி: காதலிக்கு திருமணம் நடைபெறுவதாக நினைத்துக்கொண்டு காதலியின் உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்று மதுபோதையில் இளைஞர் ரகளை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போதையில் ரகளையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது காதலிக்குதான் திருமணம் நடப்பதாக நினைத்து காதலியின் உறவினர் வீட்டிற்கு சென்ற இளைஞர் ஒருவர் கல்யாண வீட்டில் போதையில் அதகளம் செய்ததோடு, தனது காதலியின் பெற்றோரிடமும் வாக்குவாதம் செய்து உள்ளார்.

சினிமாவில் நடைபெறும் கலகலப்பான காட்சிகளை போல போதையில் வந்த இளைஞர், காதலிக்கு திருமணம் நடப்பதாக நினைத்து காதலியின் உறவினர் வீட்டு திருமணத்தில் ரகளை செய்து கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த விவரம் வருமாறு:-
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த இளைஞர் சபின். டெம்போ வேன் டிரைவரான சபின், அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு காதலியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சபின் காதலித்து வந்ததாக சொல்லப்படும் பெண்ணின் உறவுக்கார பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
சொந்த பந்தங்கள் நிறைந்து திருமண வீடு களை கட்டியிருந்தது. அப்போது மது போதையில் அங்கு வந்த சபீன் தனது காதலிக்குதான் தனக்கு தெரியாமல் திருமணம் ஏற்பாடு நடப்பதாக நினைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். திருமண வீட்டில் இருந்த காதலியின் பெற்றோரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சபினின் ரகளை தாங்க முடியதாதால் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு விசாரணை நடத்த போலீசர் வருகை தந்தனர். போதை தலைக்கேறிய நிலையில் சபீன் அங்கு போலீசாரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து தங்களை கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சபின் மீது பெண் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications