'நான் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்'.. நாகர்கோவில் ஆர்டிஓ ஆபிசரை மிரள வைத்த நபர்.. விசாரித்தால் ட்விஸ்ட்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே விசுவாசபுரம் பண்டாரபுரத்தில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வட்டார போக்குவரத்து அதிகாரியாக சசி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று வட்டார போக்குவரத்து அலுவலரை சந்தித்த மர்ம ஆசாமி ஒருவர் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் என கூறியிருக்கிறார். அவரது பேச்சில் சந்தேகம் இருந்ததால் போலீசில் ஒப்படைத்தனர். அவரை விசாரித்த போது தான் உண்மை என்ன என்று தெரியவந்தது.
ஆர்டிஓ அலுவலகங்களை பொறுத்தவரை தினமும் பலர் வாகன சோதனைக்காகவும், வாகன அனுமதிக்காகவும் வந்து செல்வது வழக்கம்.. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்ட தலைநகரான நாகர்கோவிலில் டிரைவிங் லைசென்ஸ், பர்மிட், வாகன பதிவு உள்ளிட்ட சேவைக்கு பலரும் வந்து செல்வார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கான வட்டார போக்குவரத்து அலுவலகம் என்பது தோவாளை அருகே உள்ள விசுவாசபுரம் பண்டாரபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் வந்தார். அவர் அங்கிருந்த அலுவலக உதவியாளரிடம் நான் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் என்றும், திருநெல்வேலி மாவட்டத்தில் வேலை பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரி சசியை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வட்டார போக்குவரத்து கழக ஊழியர் அவரை அதிகாரியிடம் அழைத்து சென்றுள்ளார். அங்கு அதிகாரி சகியிடம் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் என தொிவித்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த அதிகாரி சசி உங்களது அடையாள அட்டையை காட்டுங்கள் என மர்ம நபரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து அவர் குறித்து திருநெல்வேலியில் விசாரித்த ஆசாமி பொய் கூறியது தெரியவந்தது. உடனே இதுகுறித்து அதிகாரி சசி ஆரல்வாய்மொழி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து மர்ம நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டம் இணையம் புத்தன்துறை பகுதியை சேர்ந்த அவர் தற்போது மணவாளக்குறிச்சி பகுதியில் வசித்து வருகிறார். மேலும் வாகனம் வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் அவர் 2 வாகனங்களின் பெயர் மாற்றத்துக்காக கால தாமதம் ஆனதால் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் என்று கூறி நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அந்த நபரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications