நாகர்கோவில் தேவியின் நடு வீட்டு நாடகம்.. மண்டைக்காட்டிலேயே 'மந்திரம்'.. கையை பிடித்ததுமே காலி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் பில்லி சூனியத்துக்கு பரிகார பூஜை செய்வதாக கூறி மூதாட்டியிடம் நகை மற்றும் பணத்தை அபகரித்த போலி பெண் மந்திரவாதி தேவிலெட்சுமியை போலீசார் கைது செய்தனர். கைரேகை மற்றும் ஜாதகத்தை பார்த்து குறி சொல்வதாக ஏமாற்றி, கழுத்தில் கிடக்கும் தாலி சங்கிலி முதல் வீட்டில் இருந்த 50,000 பணத்தை அபகரித்திருக்கிறார் அந்த பெண்.
பில்லி சூனியம், பூஜை, பரிகாரம் உள்ளிட்ட வார்த்தைகளை கூறி ஏமாற்றுவது அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளது. இப்படிப்பட்ட போலி மந்திரவாதிகள் எப்படி என்றால், மக்களின் கஷ்டங்களை கேட்டு, அதற்கு இதனை செய்தால் நன்றாக இருக்கும்.. இந்த தோஷம் இருக்கிறது. இவர்கள் செய்வினை வைத்திருக்கிறார்கள் என்று கூறி ஏமாற்றுகிறார்கள். அதனை உண்மை என்று நம்பி பரிகாரம் செய்ய ஒப்புக்கொள்கிறார்கள். அந்த நேரத்தில் பணம், நகைகளை பறிக்கும் மந்திரவாதிகள், கிடைத்ததை சுருட்டிக் கொண்டு எஸ்கேப் ஆகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே புதூர் சி.ஆர்.எஸ். நகரை சேர்ந்த மரிய ஜேம்ஸ் என்பவர் மீன்பிடி தொழிலாளி ஆவார். இவருடைய மனைவி ஜேசு பிரபா (வயது 65). ஜேசு பிரபா கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவர் தனியாக இருப்பதை நோட்டம் விட்டு வந்த பெண் ஒருவர். குறி சொல்வதாக கூறியபடி வந்திருக்கிறார். பின்னர் அந்த பெண் மந்திரவாதி, ஜேசு பிரபாவிடம் 'உங்களது கைரேகையை பார்த்து எதிர்காலத்தில் என்னென்ன நன்மைகள் நடக்கப் போகிறது என்பதை சொல்கிறேன்' என்று பேசியிருக்கிறார். நம்பிக்கை வருவதற்காக வாயில் வந்ததை அடித்து விட்டுள்ளார்.
அவர் கூறியதை உண்மை என்று நம்பிய ஜேசு பிரபா அந்த பெண்ணை வீட்டுக்குள் அழைத்து அமர செய்தார். அந்த பெண் மந்திரவாதி, ஜேசு பிரபாவின் கைரேகை மற்றும் ஜாதகத்தை பார்த்து குறி சொல்ல ஆரம்பித்துள்ளார். முதலில் வீட்டில் நடப்பதை அப்படியே சொல்வது போல் பேசி நம்ப வைத்து நன்றாக பேசிய பெண் மந்திரவாதி, திடீரென எதோ அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்ந்தவாறு திடுக்கிட்டுள்ளார்.
அப்போது போலி பெண் மந்திரவாதி, 'இந்த வீட்டில் பில்லி சூனியம் உள்ளது. உடனே அதை முறியடிக்க பரிகார பூஜை செய்யா விட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடும்’ என்று சிறுத்தை படத்தில் கார்த்தி பேசுவது போல் பேசி ஜேசு பிரபாவை நம்ப வைத்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஜேசு பிரபா செய்வதறியாது குழம்பி இருக்கிறார். இதனை புரிந்து கொண்ட பெண், 'நான் மந்திரவாதமும் செய்வேன். எனக்கு பில்லி சூனியத்தை முறியடிக்கும் வல்லமை உள்ளது. அதற்கு நான் சொல்வதை தவறாமல் செய்ய வேண்டும்’ என்றார்.
இதனை நம்பிய ஜேசுபிரபாவும் பரிகாரத்திற்கு ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அந்த பெண், 'உங்கள் கழுத்தில் கிடக்கும் தாலி சாங்கிலியையும், ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் வைத்து பரிகார பூஜை செய்ய வேண்டும்' என்று கூறியிருக்கிறார். இதை நம்பிய ஜேசு பிரபா தனது கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி சங்கிலியை கழற்றி அவரிடம் கொடுத்தார். மேலும் வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் கொடுத்துள்ளார். அவற்றை வாங்கிய அந்த பெண், ஹாலில் வைத்து சில பூஜைகளை செய்வதுபோல் நடித்தார்.
பின்னர் ஜோசு பிரபாவிடம், 'ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வாருங்கள்' என்று கூறியிருக்கிறார். உடனே அவர் தண்ணீர் எடுக்க சமையலறைக்கு சென்றார். பின்னர் தண்ணீருடன் திரும்ப வந்து பார்த்த போது அந்த பெண் மாயமானார். அவர் தாலி சங்கிலி மற்றும் பணத்துடன் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜேசு பிரபா, மண்டைக்காடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி பெண் மந்திரவாதி குறித்து விசாரித்தனர்.
அப்போது அந்த பெண் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே தலக்குளம் செல்லும் சாலைப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருவதை கண்டு பிடித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று அவரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் போலி மந்திரவாதி இதையே தொழிலாக செய்பவர் என்ற தகவல்கள் தெரியவந்தது.
போலீசிடம் சிக்கிய போலி பெண் மந்திரவாதி பெயர் தேவிலெட்சுமி (38). இவருடைய கணவர் முத்து மணிகண்டன். இவர்கள் விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் வேலை என்னவென்றால், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை மட்டும் நோட்டமிட்டு வந்துள்ளார்கள். அவர்களின் வீட்டில் நடப்பதை கண்டுபிடிக்கும் அவர்கள். பின்னர் அவர்களின் வீட்டுக்கு கைரேகை ஜோசியம் பார்க்கும் சாக்கில் சென்று என்னென்ன பொருட்கள் இருக்கிறது? இங்கு திருடினால் எவ்வளவு தேறும்? என உறுதி செய்து விட்டு வந்துவிடுவார்கள். அப்படித்தான் ஜேசு பிரபா வீட்டில் தனியாக இருந்தபோது தேவி லெட்சுமி கைவரிசை காட்டியிருக்கிறார். இதையடுத்து போலி மந்திரவாதி தேவிலெட்சுமியை மண்டைக்காடு போலீசார் கைது செய்தார்கள். தொடர்ந்து எங்கெல்லாம் கைவரிசை காட்டினார் என்பதை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications