கன்னியாகுமரி பக்கம் இப்பவே போகனுமா.. இருமுறை யோசிங்க.. சுற்றுலா கூட்டம் அள்ளுது
கன்னியாகுமரி: அரையாண்டு விடுமுறை, சபரிமலை சீசன் காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகின்றது. விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல பயணிகள் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருக்கின்றனர். அதேபோல பகவதி அம்மன் கோயில் மற்றும் வெங்கடாசலபதி கோயில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் மாநில பாட திட்டத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் கடந்த 16ம் தேதி தொடங்கிய அரையாண்டு தேர்வு நேற்று (டிச.23) முடிந்தது. இந்நிலையில் இன்று முதல் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கி வரும் ஜனவரி மாதம் 1ம் தேதி வரை 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அதேபோல ஜனவரி மாதம் 2ம் தேதி வழக்கம் போல பள்ளிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் க.நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
நாகூர் தர்ஹா பெரிய கந்தூரி விழா! ஜனவரி 3ஆம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!
அரையாண்டு விடுமுறை
அதாவது, 1 முதல் 3ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 3ம் கட்ட பயிற்சி ஜனவரி மாதம் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே இந்த பயிற்சியில் மேற்குறிப்பிட்ட வகுப்பு ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த நாட்களில் ஆசியர்கள் பள்ளிக்கு செல்ல இயலாததால் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ஜனவரி 4ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்களுக்கு ஜனவரி 5ம் தேதி வழக்கம் போல வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரிசனம்
இந்த தொடர் விடுமுறை காரணமாக தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்களில் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது. நாட்டின் கடைக்கோடியான கன்னியாகுமரியில் இன்று காலை முதல் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு குவிய தொடங்கினர். ஏற்கெனவே ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அலைமோதிய நிலையில் தற்போது பள்ளி விடுமுறை மற்றும் சபரிமலை சீசன் காரணமாக இந்த எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. காலை முதல் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி கடலில் பக்தர்கள் நீராடி சூரிய தரிசனம் செய்துள்ளனர். அதேபோல பகவதி அம்மன் மற்றும் வெங்கடாசலபதி கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்துள்ளனர்.
பாதுகாப்பு
மேலும் காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம், சன்செட் பாயிண்ட, பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சுனாமி நினைவு பூங்கா உள்ளிட்ட இடங்களில் குழந்தைகளுடன் பெற்றோர்களும், ஐயப்ப பக்தர்களும் குவிந்துள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கூட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கும் வண்ணம் காவல்துறையினர் தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலா தலமான விவேகானந்த பாறைக்கு படகில் செல்வதற்காக நூற்றுக்கணக்கான பக்தர்கள் காலை 6 மணி முதல் வரிசையில் காத்திருக்கின்றனர்.
விவேகானந்தர் பாறை
இவர்களுக்கு சுமார் 3 மணி நேரம் கழித்துதான் டிக்கெட் கிடைப்பதாக கூறியுள்ளனர். ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில பயணிகள் இது குறித்து கூறுகையில், "நாங்கள் நீண்ட தொலைவு பயணப்பட்டு இதை காணதான் வந்திருக்கிறோம். இதை காணாமல் எப்படி போவது? எவ்வளவு நேரம் ஆனாலும் பார்த்துவிட்டுதான் போவோம்" என்று கூறியுள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் அதிக வரத்து காரணமாக கன்னியாகுமரி நகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.