அண்ணாத்த ஆடுறார்.. ஒத்திக்கோ ஒத்திக்கோ..! சிலம்பம் சுற்றி அசர வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்!
சிலம்பம் சுற்றி கவனம் ஈர்த்த அமைச்சர் மனோ தங்கராஜ்
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் கலந்துகொண்ட தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், அங்கு சிலம்பம் சுற்றி பார்வையாளர்களை அசர வைத்திருக்கிறார்.
சிலம்பாட்டத்தில் கை தேர்ந்த வீரரை போல் கடகடவென அமைச்சர் மனோ தங்கராஜ் சிலம்பம் சுற்றியது சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது.
களரி, சிலம்பம், கபடி, உள்ளிட்ட விளையாட்டுகள் மீது அமைச்சர் மனோ தங்கராஜுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம் என்கிறார்கள் அவரை நெருங்கி அறிந்தவர்கள்.
கனமழையால் சம்பா பயிர்கள் பாதிப்பு.. டெல்டா விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் வழங்குக.. ஓபிஎஸ் வலியுறுத்தல்
அமைச்சர் மனோ தங்கராஜ்
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான மனோ தங்கராஜ் எப்போதுமே கொஞ்சம் பரபரப்பாக இயங்கக் கூடியவர். சென்னையில் இருந்தாலும் சரி, சொந்த ஊரில் இருந்தாலும் சரி தன்னை பிஸியாகவே வைத்துக் கொள்ளும் இவர், அவ்வப்போது சில அதிரடிகளையும் அரங்கேற்றுவார். அண்மையில் கூட ஒரு பேரூராட்சி செயல் அலுவலரிடம் பேசிய போது, ஒரு மினிஸ்டரிடம் பேசுகிறோம் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
சிலம்பம் சுற்றிய அமைச்சர்
அதேபோல் மழை, புயல், வெள்ளக் காலங்களில் அதிகாரிகளை விரட்டி விரட்டி வேலை வாங்குவதில் தனித் திறமை மிக்கவர். இப்படி ஆக்டிவாகவே வலம் வரும் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவிலில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கச் சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த சிலர் அமைச்சரையும் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பம் சுற்றுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க மறுப்பேதும் சொல்லாமல் களத்தில் இறங்கியிருக்கிறார்.
ஆரோக்யமான உடல்
கையில் கம்பு கிடைத்தவுடன் கை தேர்ந்த சிலம்பாட்ட வீரரை போல் சும்மா சுற்றி சுற்றி சிலம்பாட்டம் ஆடி பார்வையாளர்களை அசத்தியுள்ளார். இதனிடையே இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவாக வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ். வயது 50ஐ கடந்தாலும் உடல்நலத்தை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன் என்பதையும் அமைச்சர் மனோ தங்கராஜ் இதன் மூலம் சூசகமாக உணர்த்தியுள்ளார்.
விளையாட்டரங்கம்
இதனிடையே கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் ரூ.3 கோடி மதிப்பில் விளையாட்டரங்கம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளதாகவும் விரைவில் பணிகள் தொடங்கப்படும் எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியிருக்கிறார்.