"சார் சார்.." கையை உயர்த்திய மாணவன்.. அண்ணாமலையிடம் கேட்ட கேள்வியால் சிரிப்பலை
கன்னியாகுமரி: பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற நிகழ்ச்சியில் ஆவேசத்துடன் எழுந்த மாணவர் கேட்ட கேள்வியால் அங்கு சிரிப்பலை எழுந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள பயோனியர் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசிய பிறகு மாணவர்கள் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்ப வாய்ப்பளிக்கப்பட்டது. அப்போது வேகமாக எழுந்து மாணவர் ஒருவர் கையை உயர்த்தினார்.

முக்கிய கேள்வி
அவர் ஏதோ முக்கியமான கேள்வியை கேட்கிறார் என நினைத்து உன்னிப்பாக கவனித்த போது அந்த மாணவனின் கேள்வி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது. அந்த மாணவன், அண்ணாமலையிடம் அப்படி என்ன கேள்வி கேட்டார் தெரியுமா? "சார் உங்களோட ஒரு போட்டோ எடுக்கட்டுமா" என்றான்.

சிரிப்பு
இதையடுத்து சிரித்துக் கொண்டே அண்ணாமலை அந்த மாணவனை மேடைக்கு வரவழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து மற்றொரு மாணவன் அண்ணாமலையிடம் நீங்கள் ஏன் காவல்துறை அதிகாரியாக தமிழகத்தில் பணிபுரியவில்லை என்ற கேள்வியை முன் வைத்தார்.

ஐபிஎஸ் பயிற்சி
அதற்கு பதில் அளித்த அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரிகள் பயிற்சி முடித்த பின்பு எந்தெந்த மாநிலங்களில் பணியாற்ற வேண்டும் என உத்தரவு வழங்கப்படும் . அதில் எனக்கு கர்நாடகத்தில் பணியாற்றுமாறு உத்தரவு வழங்கியதையொட்டி அங்கு 9 ஆண்டு காலம் பணியாற்றியதாக தெரிவித்தார்.

அரவக்குறிச்சி அண்ணாமலை
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். இதையடுத்து அவர் தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார். பின்னர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன் மத்திய இணையமைச்சரானதை அடுத்து அந்த பதவிக்கு அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

கடும் அதிருப்தி
தமிழகத்தில் திமுக அரசை அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வந்தாலும் அவரது சில செயல்பாடுகள் டெல்லி தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் எல் முருகனை வைத்து அண்ணாமலையின் செயல்பாடுகளை கண்காணிக்க சென்னை கமலாலயத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications