கன்னியாகுமரியில் சொத்து வாங்க ஆசைப்பட்ட தலைமை ஆசிரியர்.. சின்ன தவறால் 36 லட்சம் அவுட்.. பாருங்க
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை குருவிகாடு பகுதியை சேர்ந்த அருள் சகாய சேகர் என்பவர் காஞ்சிரபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது எதிர் வீட்டில் வசிக்கும் தம்பதிக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. அவர்கள் அருளிடம் வந்து சொத்தை தருவதாக கூறி பணம் கேட்டுள்ளனர். அவரிடம் 36 லட்சத்தை வாங்கி கொண்டு சொத்தை தராமல் ஏமாற்றி உள்ளனர். அந்த தம்பதி இறுதியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சொத்து வாங்க போகிறவர்கள், சொத்திற்கான பணத்தை தருவதற்கு முன்பு பல்வேறு சட்ட விஷயங்களை முறையாக பின்பற்ற வேண்டும். சொத்தை எழுதி தராமல் பணத்தை தரக்கூடாது. அப்படியே பணத்தை முன்கூட்டியே தர வேண்டும் என்று சொன்னால் காசோலை மூலம் தராலாம். முன்தேதியிட்ட காசோலை மூலம் பணம் தரலாம்.

சொத்து வாங்குவோர் கவனிக்க வேண்டியவை
சொத்தை எழுதி தந்த பின்னரே பணத்தை ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏமாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல் சொத்து விற்போருமே காசோலை வாங்கிய பின்னர் எழுதி தரலாம். ஏனெனில் அவர்களுமே ஏமாற்றப்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல் அடமானத்தில் சொத்து இருக்கிறதா என்பதை தெரியாமல் பணம் கொடுத்து ஏமாந்துவிடாதீர்கள்.. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
சொத்து விற்க முடிவு
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை குருவிகாடு பகுதியில் 56 வயதாகும் அருள் சகாய சேகர் வசிக்கிறார். இவர் காஞ்சிரபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய எதிர் வீட்டில் வசிப்பவர் ததேயூஸ் (51). இவர் நாங்குநேரியில் குழாய் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஜெய்னி (49). ஜெய்னி பெயரில் 5 சென்ட் இடம் இருக்கிறது. இதை விற்று பணம் திரட்ட ததேயூஸ் முடிவு செய்தார். இதை அருள் சகாய சேகரிடம் கூறியுள்ளார். அந்த இடத்தை தான் வாங்குவதாக சம்மதம் தெரிவித்தார்.
36 லட்சம் மோசடி
அதன்படி அருள் சகாய சேகரின் மகன் மெபிஷ் பெயரில் சொத்தை வாங்குவதற்கு விலை பேசி முன் தொகையாக ரூ.6 லட்சத்தை 20-2-2023 அன்று ஜெய்னியிடம் கொடுத்தாராம். மீதி தொகையான ரூ.27 லட்சத்தை ததேயூசின் வங்கி கணக்கில் அருள் சகாய சேகர் செலுத்தினாராம். ஆனால் சொத்திற்கான முழு தொகையையும் வாங்கிய பிறகு கடனாக ரூ.3 லட்சத்தை மீண்டும் ஜெய்னி வாங்கியிருக்கிறார். இவ்வாறு ரூ.36 லட்சம் பெற்று விட்டு இரண்டு வருடமாக சொத்தை எழுதி கொடுக்காமல் தம்பதி இருவரும் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
அடமானத்தில் சொத்து
இதனையடுத்து இதுதொடர்பாக தக்கலை போலீசில் அருள் சகாய சேகர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கணவன், மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், விலைக்கு கொடுப்பதாக கூறிய சொத்தின் ஆவணத்தை வைத்து வங்கியில் ஏற்கனவே கடன் பெற்றிருப்பது தெரியவந்தது. அடமானத்தில் இருக்கும் சொத்தை மீட்டால் தான் அருள் சகாய சேகரின் மகனின் பெயருக்கு எழுதி கொடுக்க முடியும். ஆனால் அதை மீட்பதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் மோசடி செய்யும் நோக்கத்தில் கணவனும், மனைவியும் செயல்பட்டது போலீஸ் விசாரணையில் உறுதியானது. இதனையடுத்து நேற்று ஜெய்னி, ததேயூஸ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications