தமிழகத்தை மத்திய அரசு பழி வாங்குகிறது! குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் பரபரப்பு புகார்!
கன்னியாகுமரி: தமிழகத்திற்கு எந்தவொரு புதிய ரயில் திட்டங்களையும் அறிவிக்காததன் மூலமாக மத்திய அரசு பழிவாங்குவதாக கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நாகர்கோவில் -கோவை இடையே திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக புதிய ரயில் ஒன்றை இயக்க வேண்டும் என அவர்கள் முன் வைத்த கோரிக்கைக்கு சாத்தியக்கூறுகளே இல்லை என மத்திய அமைச்சர் பதிலளித்திருக்கிறார்.
இந்நிலையில் இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
2 ஆண்டுகளுக்கு பின்.. பாலக்காடு - ஈரோடு மெமு ரயில் நாளை முதல் இயக்கம்.. ரயில் பயணிகள் மகிழ்ச்சி!
புதிய ரயில்
நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு பதிய ரயில் இயக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று கோவை எம்.பி நடராஜன் கேட்ட கேள்விக்கு பாராளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் பதில் அளித்துள்ளார். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து தமிழகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் தொழில் நகரமான கோயம்புத்தூருக்கு போதிய ரயில் வசதி தற்போது இல்லை.
கூடுதல் ரயில்
தற்போது நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு இரண்டு தினசரி ரயில்கள் இயக்கப்படுவதால் ஒரு ரயில் இரவு நேர சூப்பர் பாஸ்ட் ரயிலாகவும் மற்றொரு ரயில் பகல்நேர ரயிலாகவும் கோவைக்கு இயக்கப்படுகின்றது. இந்த நிலையில் தமிழகத்தின் கடைசி எல்லை மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலிருந்து மதுரை, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு கூடுதல் ரயில்கள் அதாவது நாகர்கோவில் - கோவை ஜனசதாப்தி ரயில், கன்னியாகுமரி -மேட்டுப்பாளையம் இரவு நேர ரயில் என இரண்டு ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
கோவை எம்.பி.
தென்மாவட்ட பயணிகள் கோரிக்கையை வலியுறுத்தியதன் விளைவாக கோவை எம்பி பாராளுமன்றத்தில் நாகர்கோவிலிருந்து பழநி வழியாக கோவைக்கு ரயில் இயக்க கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்துள்ள ரயில்வே அமைச்சர் தற்போது கோயம்புத்தூரில் இருந்து போத்தனூர்-பொள்ளாச்சி மற்றும் மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு புதிய இரவு நேர ரயில் அறிமுகம் செய்ய உடனடியாக முன்மொழிவு திட்டம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ரயில்வே அமைச்சர்
தற்போது கோவை - நாகர்கோவில் மார்க்கத்தில் (ஈரோடு வழியாக) 8 ஜோடி சேவைகள் தற்போது இயக்கப்படுகின்றன என்றும், தவிர புதிய ரயில்களை அறிமுகப்படுத்துவது என்பது இந்திய ரயில்வேயில் செயல்பாட்டின் உள்ள சாத்தியக்கூறு, போக்குவரத்து முறை, ரயில் பெட்டிகள், பராமரிப்பு, காலஅட்டவணை, கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை பொறுத்து போன்றவற்றுக்கு உட்பட்டு நடந்து வரும் செயலாகும். என்று ரயில்வே அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
பழிவாங்கல்
கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டில் இதுவரை எந்த ஒரு புதிய ரயில்களையும் ரயில்வே துறை அறிமுகப்படுத்தவில்லை. இன்னமும் அடுத்த வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தல் வரையிலும் எந்த ஒரு புதிய ரயிலும் அறிவிக்க போவதும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இவ்வாறு அறிவிக்கப்படாமல் இருப்பது தமிழ்நாட்டு மக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்து ஆளும் கட்சி எம்.பிகள் யாருமே இல்லாத காரணத்தால் மத்திய அரசு தமிழ்நாட்டை மறைமுகமாக பழிவாங்குகிறது.
தெற்கு ரயில்வே அதிகாரிகள்
இதற்கு தெற்கு ரயில்வே அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர் என்பதுதான் உண்மை. இதையும் மீறி ஒரு சில நிறுத்தங்கள் அல்லது ரயில்கள் நீட்டிப்புக்கு தெற்கு ரயில்வே அதிகாரிகள் ரயில்வே வாரியத்துக்கு திட்டத்தை அனுப்பினால் ரயில்வே வாரியம் அதை கிடப்பில் போடும் வருகிறது. தற்போதைய அரசியல் சூழலும் தமிழகத்துக்கு சாதகமாக இல்லாத காரணத்தால் தெற்கு ரயில்வே அதிகாரிகள் அவர்களின் விருப்பப்படி யாரும் கேள்வி கேட்க முடியாது என்று அதிகார வர்க்கத்தின் ஆணவத்தில் செயல்பட்டு வருகின்றனர். இது போன்ற ரயில்வே அதிகாரிகள் குறிப்பாக ரயில்கள் இயக்க பிரிவு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்.