கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க.. 40000 ரூபாய் மானியம் பெற அழைப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பரியமாக ரப்பர் வளரும் பகுதிகளில் 2023, 2024-ம் ஆண்டுகளில் ரப்பர் மறு நடவு மற்றும் புது நடவு செய்துள்ள விவசாயிகள் ரப்பர் வாரியத்தின் ரூ.40000 மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என ரப்பர் வாரியம் அறிவித்துள்ளது.
உலகிலேயே தரமான ரப்பர் பால் உற்பத்திக்கு பெயர் பெற்ற இடமாக கன்னியாகுமரி மாவட்டம் திகழ்கிறது. ஏனெனில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய பணப்பயிர்களாக தென்னை, ரப்பர் ஆகியவை உள்ளன. மலையோரப் பகுதிகளில் ரப்பர் விவசாயம் முக்கிய வாழ்வாதாரமாக இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் பெரும்பாலான வீடுகளில் ரப்பர் மரம் எளிதாக வளர்கிறது . மண் வளமும், குளிர்ச்சியான சூழலும் முக்கிய காரணமாக இருக்கிறது.

இங்குள்ள செம்மண் ஈரப்பதத்தை உறிஞ்சுவதுடன், மரங்கள் செழிப்பாக வளர உதவி செய்கிறது. கேரளாவில் உள்ள கோட்டயமும், தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டமும் ரப்பர் உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. தமிழ்நாட்டில் ரப்பர் விவசாயத்தை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ரப்பர் விவசாயிகளுக்கு 40000 மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் ரப்பர் வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பரியமாக ரப்பர் வளரும் பகுதிகளில் 2023, 2024-ம் ஆண்டுகளில் ரப்பர் மறு நடவு மற்றும் புது நடவு செய்துள்ள விவசாயிகள் ரப்பர் வாரியத்தின் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். 4 ஹெக்டேருக்கு மிகாமல் ரப்பர் நடவு செய்துள்ள விவசாயிகள், ஒரு எக்டேர் வரையிலான பகுதிக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு மானியம் பெற தகுதி உடையவர்கள் ஆகும்.
விவசாயிகள் தங்களது விண்ணப்பங்களை மத்திய அரசின் 'சர்வீஸ் பிளஸ்' இணையதளம் மூலம் வருகிற 23-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ரப்பர் நடவு செய்யப்பட்டுள்ள பகுதியின் உரிமைச் சான்று, நடவு செய்யப்பட்ட பகுதியின் தோராயமான வரைபடம், வங்கி கணக்குப் புத்தகத்தின் நகல், கூட்டு உரிமைக்கான நியமன சான்று போன்ற சான்றிதழ்களை விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தகுதியான விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.40 ஆயிரம் மானியம் வழங்கப்படும். மேலும் விவரங்களை www.rubberboard.org.in என்ற இணையதளத்தில் பெறலாம். அல்லது அருகில் உள்ள ரப்பர் வாரிய மண்டல அலுவலகங்கள், கள அலுவலகங்கள் மற்றும் ரப்பர் வாரிய அழைப்பு மையத்தை 0481-2576622 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications