போலீசார் அலட்சியம்.. கன்னியாகுமரியில் அடித்தே கொல்லப்பட்ட மீனவர்.. வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை அருகே மீனவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் ஒருவர் மட்டும் கைது செய்தனர். இந்தச் சூழலில் இது தொடர்பான சிசிடிவி காட்சியில் பலர் ஒன்றுசேர்ந்து அவரை தாக்குவது தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயதான புருனோ. இவர் விசைப்படகுகளைப் பழுது பார்ப்பது, ஆழ்கடலில் சிக்கி நிற்கும் படகுகளை பைபர் படகுகளால் மீட்டு வருவது ஆகிய பணிகளில் ஈடுபட்டு வந்தார். மேலும், இவர் மீன்பிடி தொழிலையும் செய்து வந்தார்.
குடும்ப சொத்தை பிரிப்பது தொடர்பாக இவருக்கும் இவரது சகோதரிக்கும் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் மீன்பிடி தொழிலுக்குச் சென்று திரும்பிய இவர்,தனது சகோதரியிடம் சொத்தில் உள்ள பங்கைக் கேட்டுள்ளார்

சொத்து பிரச்சினை
அக். 27ஆம் தேதி வீட்டிற்கு வருமாறும் அப்போது சொத்து தொடர்பாகப் பேசலாம் என அவரது சகோதரி தெரிவித்துள்ளார். இருப்பினும், அக். 27ஆம் தேதி வீட்டிற்குச் சென்ற போது, சொத்து தொடர்பாக அவரது சகோதரி பேச மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த புருனோ கடந்த 2ஆம் தேதி மதுபோதையில் தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்று சொத்து தொடர்பாகப் பேசியுள்ளார்.

அடித்துக்கொலை
அப்போது ஏற்பட்ட வாய் தகராறு திடீரென கைகலப்பாக முற்றியது. அப்போது புரூனோவின் சகோதரி வீட்டில் இருந்தவர்கள் ஒன்று சேர்ந்து புரூனோவையும் அவருடன் வந்த 44 வயது மதிக்கத்தக்க நபரையும் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த இருவரும் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக அவர் கருங்கல் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன்படி அடிதடி வழக்குப்பதிவு செய்து போலீசார்,

போலீசார் மெத்தனம்
இது தொடர்பாக விசாரணை நடத்தினர், இந்தச் சூழலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புருனோ சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து அடிதடி வழக்கைக் கொலை வழக்காக மாற்றிய போலீசார், இது தொடர்பாக அந்தோணி என்ற ஒருவரை மட்டும் கைது செய்தனர். இந்தச் சூழலில் இந்தத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் மீனவரையும் அவருடன் வந்தவரையும் 4, 5 பேர் கடுமையாகத் தாக்குவது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் போலீஸார் மெத்தனமாக ஒருவரை மட்டும் கைது செய்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

போலீசார் விளக்கம்
இது தொடர்பாக குளச்சல் உட்கோட்ட டி.எஸ்.பி. தங்கராமனை தொடர்பு கொண்டு கேட்ட போது, சிசிடிவி காட்சிகள் தற்போது தான் கிடைத்துள்ளதாகவும் காவல் அதிகாரிகள் சரியாகப் புலன் விசாரணை நடத்தாததாலேயே குழப்பம் ஏற்பட்டதாக விளக்கம் அளித்தார். மேலும், இது தொடர்பாக இரு நபர்களை தற்போது கைது செய்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications