கன்னியாகுமரி பிளஸ் 2 மாணவிக்கு கொட்டிய பல லட்சங்கள்.. தாயின்'காதலன்' ஐடியா.. கடைசியில் ட்விஸ்ட்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த ஜெராக்ஸ் கடை உரிமையாளருக்கு பிளஸ் 2 முடித்த மகள் ஒருவர் இருக்கிறார். இந்த இளம் பெண்ணிடம் காதலன் போல் இன்ஸ்டாகிராமில் பழகிய தோழி, 60 சவரன் தங்க நகைகளை அபகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த தோழி போலீசுக்கு பயந்து செய்த காரியம் ஆடிப்போக வைத்துள்ளது.என்ன நடந்தது எப்படி ஏமாற்றினார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர், தனது மனைவி மகளுடன் வசித்து வருகிறார். இவருடைய மகளுக்கு 17 வயது ஆகிறது. இவர் பிளஸ்-2 முடித்து விட்டு கல்லூரிக்கு செல்ல தயாராகி வருகிறார். இந்தநிலையில் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வீட்டில் 60 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது.இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்,

இன்ஸ்டாவில் பழக்கம்
இதையடுத்து மகளை அழைத்து விசாரித்தார். அப்போது மகள் 'நான் பிளஸ்-2 படிக்கும்போது எனக்கும், சக பள்ளி தோழிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் என்னை காதலிப்பதாக கூறினார். ஆனால் எனக்கு அந்த வாலிபரின் முகம் தெரியாது. அத்துடன் அவருக்கு மோட்டார் சைக்கிள் வாங்கவும், தாயாரின் மருத்துவ செலவுக்கும் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார்.
பணம் இல்லை
நான் பணம் இல்லை என்று எவ்வளவோ கூறியபோது, எனது நகைகளை தோழியிடம் கொடுத்து அனுப்புமாறு என்னிடம் கேட்டு கொண்டார். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக எனது தோழி மூலம் அவருக்கு கொடுத்து அனுப்பினேன்' என்று கூறியிருக்கிறார்.
நகைகள் மாயம்
இதையடுத்து மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளி தோழியை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியிருக்கிறார். இந்த நிலையில் தோழியின் தந்தை, தனது மகளின் பீரோவில் 8 வளையல், 2 தங்க சங்கிலி என 15 பவுன் நகைகள் இருந்ததாக போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில், அந்த நகைகள் மாணவியின் மாயமான நகைகள் என்பது தெரியவந்தது.
நாடகம் அம்பலம்
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தோழியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது தோழி தான், திட்டமிட்டு மாணவியை ஏமாற்றியது அம்பலமானது. அதற்கு அவர் செய்த தகிடுதத்தம் போலீசாரையே தலைசுற்ற வைத்தது. இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி காதலன் போல் பேசி மாணவியிடம் நாடகமாடியதும் அவரே தான். பின்னர் காதலனுக்கு கொடுக்க வேண்டும் என கூறி நகைகளை அபகரித்ததும் தோழிதான். மேலும் இதற்கு அவருடைய தாயார் வகுத்த திட்டமே, மூலக் காரணம் என்ற மற்றொரு பகீர் தகவலும் வெளியானது.
தோழிக்கு கடன்
அதாவது தோழியின் தந்தை கூலி வேலை செய்து வருகிறார். இவரது தாயார் சுய உதவி குழுக்களிலும், வங்கியிலும் பல லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஆனால் போதிய வருமானம் இல்லாததால் கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதியடைந்து வந்துள்ளார். இதற்கிடையே வங்கி ஊழியர்கள் கடனை திரும்ப கேட்டு தொல்லை கொடுத்தனர்.
தாய்க்கு வந்த ஐடியா
அப்போது, அந்த பெண்ணின் தாயாருக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றியது. அதாவது தனது மகளின் தோழியான மாணவி, நல்ல வசதியுடன் இருப்பதை அறிந்து அவரிடம் இருந்து நகைகளை அபகரிக்க திட்டமிட்டார். தாயாரின் ஆலோசனைபடி தோழி ஒரு ஆண் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி மாணவியிடம் காதலன் போல் இனிக்க, இனிக்க பேசி பழகியிருக்கிறார். இதனை சாதகமாக வைத்து மோட்டார் சைக்கிள் வாங்கவும், தாயின் மருத்துவ செலவுக்கும் பணம் தேவைப்படுகிறது என கூறி தோழி நகைகளை வாங்கி மோசடி செய்திருக்கிறார்.
தவறான முடிவு
அந்த நகைகளை அடகு வைத்து தாயின் கடனை அடைத்து வந்ததோடு தங்களது குடும்ப தேவைகளையும் நிறைவேற்றி வந்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதற்கிடையே விசாரணை முடிந்து வீடு திரும்பிய தோழியும், தாயும் போலீசார் தங்களை கைது செய்து விடுவார்களோ? என்ற அச்சத்தில் மருந்தை குடித்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள திட்டமிட்டனர். உடனே அவர்களை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications