கன்னியாகுமரி சிந்து வீசிய வலை.. வசமாக சிக்கிய இளைஞர்.. தபாலில் நம்பவே முடியாத ட்விஸ்ட்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள கண்டன்விளை பண்டாரவிளையை சேர்ந்த விஜய் கார்வின் என்பவர் என்ஜினியரிங் முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இவருக்கு ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கொல்லங்கோடு அருகே உள்ள ஊரம்பு புன்னையைகோணம் பகுதியை சேர்ந்த சிந்து என்பவர் 19 லட்சம் மோசடி செய்துவிட்டாராம். கேட்கும் போது எல்லாம் பணத்தை அள்ளி தந்து ஏமாந்துள்ளார் விஜய்.. எப்படி ஏமாற்றினார் என பார்ப்போம்.
இன்றைக்கு அரசு வேலையில் சேருவது என்பது எளிதானது அல்ல.. மிகவும் சவாலானது.. போட்டித்தேர்வுகளில் எழுதி பல லட்சம் பேருக்கு நடுவில் போட்டியிட்டு ஜெயிக்க வேண்டும். அப்படி ஜெயிப்பது என்பது வெறும் ஆயிரம் பேருக்கோ அல்லது 100 பேருக்கோ அந்த வாய்ப்பு கிடைக்கும். அதுவும் அங்குள்ள காலிப்பணியிட எண்ணிக்கையை பொறுத்துதான் அமையும். இந்நிலையில் சிலர் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபடுகிறார்கள்.

எனக்கு அவரை தெரியும்.. என் சொந்தக்காரர் தான் ரயில்வேயில் உயர் அதிகாரியாக உள்ளார்.. டிஎன்பிஎஸ்சியில் வேலை செய்கிறார், அமைச்சரின் உதவியாளராக இருக்கிறார், கல்வித்துறை அதிகாரியாக இருக்கிறார் என்று மோசடி செய்கிறார்கள். அப்படித்தான் ரயில்வேயில் வேலைக்கு சேர ஆசைப்பட்டு ஒரு இன்ஜினியர் ஏமாந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள கண்டன்விளை பண்டாரவிளையை சேர்ந்தவர் ஸ்டீபன் ரிச்சர்ட் என்பவருடைய மகன் விஜய் கார்வின். 33 வயதாகும் இவர் இன்ஜினியரிங் முடித்துள்ளார். இவர் அரசு வேலை தேடி வந்தார். தனது உறவினர்கள் மூலம் கொல்லங்கோடு அருகே உள்ள ஊரம்பு புன்னையைகோணம் பகுதியை சேர்ந்த சுரேஷ் மனைவி சிந்து (47) என்பவர் விஜய்க்கு அறிமுகம் ஆனார்.
விஜய் கார்வினுக்கு சரியான வேலை இல்லை என்பது சிந்துவுக்கு தெரிந்தது. இதையடுத்து சிந்து, தன்னால் அரசு வேலை வாங்கித்தர முடியும் என்று ஆசை காட்டி அவரிடம் பணம் பறிக்க முடிவு செய்தாராம். தனக்கு ரயில்வேயில் வேலை செய்யும் பல அதிகாரிகளை தெரியும் என்றும், பணம் கொடுத்தால் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாகவும் வலை வீசியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பி விஜய் கார்வின் சிந்துவின் வலையில் சிக்கினார். சிந்து கொடுத்த வங்கி கணக்கிற்கு கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ந் தேதி முதல் தவணையாக ரூ.6 லட்சமும், பின்னர் பலரிடம் கடன் வாங்கி ரூ.8 லட்சம், ரூ.1 லட்சத்தையும் அடுத்தடுத்து கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் இந்த பணம் போதாது எனக் கூறிய சிந்து, மீண்டும் பணம் கேட்டாராம் ரயில்வே வேலை மீதான மோகத்தில் விஜய் கார்வின் மீண்டும் ரூ.4 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மொத்தம் ரூ.19 லட்சத்தை சிந்து விஜய்யிடம் வாங்கிவிட்டாராம்.
பின்னர் சிந்து, 'வேலைக்கான ஆணை தபாலில் வரும்’ என கூறிவிட்டு சென்றுள்ளார். அவர் கூறியபடி விஜய் கார்வினுக்கு தபாலில் கடிதம் ஒன்று வந்தது. அதில் ரயில்வே முத்திரை பதித்த பணியாளர் அடையாள அட்டையும், ரயில்வே பணி நியமன ஆணையும் இருந்திருக்கிறது.
இந்த பணி நியமன ஆணையை எடுத்து கொண்டு மகிழ்ச்சியுடன் சென்ற விஜய், ரயில்வே அதிகாரிகளிடம் காட்டியிருக்கிறார். அப்போது தான் அது போலியானது என தெரிய வந்தது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த விஜய் கார்வின், சிந்துவை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப பெற முயன்றுள்ளார். ஆனால் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய போது முன்னுக்குப் பின் முரணாக பேசினார். ஒரு கட்டத்தில் சிந்து தலைமறைவாகி விட்டார்.
இதுகுறித்து விஜய் கார்வின் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க இரணியல் போலீசாருக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இரணியல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி சிந்து மீது வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்டில் இருந்த சிந்துவை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தக்கலை மகளிர் சிறையில் அடைத்தனர். ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக இன்ஜினியரிடம் பெண் ஒருவர் ரூ.19 லட்சம் பெற்று மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications