கன்னியாகுமரியில் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை மகேஷ்.. கடைசி நாளில் ஆறு பேருக்கு மறுவாழ்வு
நாகர்கோவில்: நெல்லை மாவட்டம் ஆவாரைகுளம் அருகே உள்ள சவுந்தரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் என்பவர் சில மாதங்களுக்கு முன்புதான் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர் கடந்த 16ம் தேதி விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். புதுமாபிள்ளை மகேஷ் மண்ணில் மறைந்தாலும், போகும் போது ஆறு பேருக்கு மறு வாழ்வு கொடுத்துவிட்டு சென்றார். அந்த சோகத்திலும் மற்றவர்கள் வாழ வேண்டும் என்று உடல் உறுப்புகளை தானம் செய்த மகேஷ் குடும்பத்தினரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
உடல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக பார்ப்போம். நெல்லை மாவட்டம் ஆவாரைகுளம் அருகே உள்ள சவுந்தரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதாகும் மகேஷ் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குமரி மாவட்டம் மருங்கூரைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துள்ளார்.

விபத்தில் சிக்கிய புதுமாப்பிள்ளை
புதுமாப்பிள்ளை மகேஷ் கடந்த பிப்ரவரி 16-ந் தேதி மதியம் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குப் புறப்பட்டார். காவல்கிணறு ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது அவரது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதியிருக்கிறது. இதில் பலத்த காயம் அடைந்த மகேஷ் சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு உடனனே கொண்டு செல்லப்பட்டார்.
உடல் உறுப்பு தானம்
பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவரது மூளை செயலிழந்தது. இதைத் தொடர்ந்து அவர் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் கூறினர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதறி அழுதனர்.. 'திருமணமாகி வெறும் இரண்டு மாதத்தில் நடந்ததை நினைத்து கதறி அழுதனர். அப்போது டாக்டர்கள், மகேஷின் உறுப்புகள் மூலம் மற்றவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கலாம் என்ற கூறினார்கள்.
ஆறு பேருக்கு மறுவாழ்வு
அப்போது சோகத்தின் நின்ற குடும்பத்தினர், மற்றவர்களை வாழ வைப்பதற்காக அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனர். அந்த வகையில் கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கருவிழிகள் மற்றும் தோல் ஆகிய உறுப்புகளைத் தானமாக கொடுக்கச் சம்மதித்தனர்.
இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் லியோ டேவிட் முன்னிலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தானம் பெறப்பட்ட உறுப்புகளைத் தேவைப்பட்ட மருத்துவமனைக்கு அனுப்பத் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது. கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் திருச்சிக்கும், மற்றொரு சிறுநீரகம் காரைக்குடிக்கும் அனுப்பப்பட்டது. தோல் மதுரைக்கும், 2 கருவிழிகள் நாகர்கோவிலில் உள்ள ஒரு மருத்துவனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதன்மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்படுகிறது.
நாகர்கோவிலில் போக்குவரத்து ஏற்பாடு
இதற்கிடையே உடல் உறுப்புகளைக் கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்கள் எளிதில் செல்லும் வகையில் நாகர்கோவில் நகரில் போக்குவரத்தை நிறுத்தி தேவையான ஏற்பாடுகளைப் போலீஸார் செய்து தந்தார்கள். இதன் காரணமாக ஆம்புலன்ஸ்கள் எந்தவொரு நெரிசலிலும் சிக்காமல் நாகர்கோவில் நகரைச் சில நிமிடங்களில் கடந்து சென்றுவிட்டன. உடல் உறுப்பு தானம் செய்த மகேஷின் உடலுக்கு டாக்டர்கள், மருத்துவ மாணவ-மாணவிகள் மரியாதை செலுத்தி உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
உருக்கம்
இது குறித்து உறவினர்கள் கூறுகையில், "மகேஷ் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய நாங்கள் முடிவு செய்தோம். அவரது உறுப்புகளை கொண்டு சிலர் உயிர் வாழ்வார்கள் என்ற நல்லெண்ணத்துடன் இந்த முடிவை எடுத்தோம். அதன் அடிப்படையில் அவரது கிட்னி, கல்லீரல், கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்கள்.












Click it and Unblock the Notifications