கன்னியாகுமரி: பகவதி அம்மன் கோவிலில் நாளை தை அமாவாசை விழா - முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தை அமாவாசை விழா பிப்ரவரி 1ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
கன்னியாகுமரி: தை அமாவாசை விழா கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பிப்ரவரி 1ஆம் தேதி கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தை அமாவாசையையொட்டி பக்தர்கள் முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் செலுத்துவார்கள். இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும், பின்னர் அம்மன் கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் அமாவாசை தினத்தன்று தை அமாவாசை விழா கொண்டாடுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு தை அமாவாசை விழா நாளை செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.

அமாவாசை திதி இன்று பிற்பகலுக்கு மேல் தொடங்குகிறது. நாளை வரை அமாவாசை திதி உள்ளது. இதனையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் போன்றவை நடக்கிறது.
தொடர்ந்து தீபாராதனை, உஷ பூஜை, ஸ்ரீ பலிபூஜை, நைவேத்திய பூஜை, உச்சிகால பூஜை ஆகியவை நடைபெறும். அதன் பிறகே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
தை அமாவாசையையொட்டி பக்தர்கள் முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் செலுத்துவார்கள். இதற்காக அதிகாலை 4 மணியில் இருந்தே கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து இருக்கும் வேதமந்திர ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் செய்வார்கள். அதன்பிறகு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
கோவிலில் இரவு 8.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும், பின்னர் அம்மன் கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
ஆண்டுக்கு 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து அம்மன் வெள்ளி பல்லக்கில் கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம் வருதல், வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு, அத்தாழ பூஜை, தீபாராதனை போன்றவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications