கன்னியாகுமரியில் சகோதரிகளின் திருமணத்துக்கு வாங்கிய கடனுக்காக.. எந்த அண்ணணும் செய்யக்கூடாத காரியம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு காவல் நியைம் எதிரே இருந்த ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளார் இளைஞர் ஒருவர். இது பற்றி டெல்லியில் இருந்து கட்டுப்பாட்டு அறை மூலம் போலீசாருக்கு தகவல் பறந்தது. இதையடுத்து அந்த இளைஞரை போலீசார் தேடிப்பிடித்து அதிரடியாக கைது செய்தனர். தனது சகோதரிகளின் திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க அவர் கொள்ளையனாக மாற வேண்டிய நிலை வந்ததாக இளைஞர் கூறினார்.
கடன் வாங்கியதை அடைக்க முடியாத சிலர் திருடர்களாக மாறும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கிறது. யூடியூப்பை பார்த்து திருடுவது, நகைக்கடையில் கத்தியை காட்டி மிரட்டுவது, நகை அடகு கடையில் பூட்டை உடைத்து திருடுவது போன்ற பல்வேறு செயல்களை செய்கிறார்கள். அப்படித்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் சகோதரிகளின் திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க திருடனாக மாறிய சம்பவம் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு காவல் நிலையத்தின் எதிரே கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையமும் இயங்கி வருகிறது. கடந்த 2-ந் தேதி நள்ளிரவு மர்ம ஆசாமி ஏ.டி.எம். மையத்தில் புகுந்து எந்திரத்தை உடைக்க தொடங்கி இருக்கிறார். அப்போது எந்திரம் உடைக்கப்படும் தகவல் அலாரம் வழியாக டெல்லியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சென்றிருக்கிறது.
உடனே வங்கி கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் உஷாராகி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அத்துடன் கொல்லங்கோடு போலீசாரும் உஷார்படுத்தப்பட்டார்கள். உடனே கொல்லங்கோடு போலீசார் ஏ.டி.எம். மையத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஆசாமி தப்பி சென்று விட்டார். இதனையடுத்து போலீசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தார்கள்.
போலீசார் நடத்திய விசாரணையில். சரியான நேரத்தில் டெல்லியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசுக்கு தகவல் சென்றதால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது. இந்தநிலையில் நேற்று காலையில் வங்கி ஊழியர்கள் திருட்டில் ஈடுபட்ட ஆசாமியின் புகைப்படத்தை போலீசாரிடம் கொடுத்தார்கள். அதாவது இந்த புகைப்படம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த புகைப்படத்தில் உள்ள ஆசாமி கொல்லங்கோடு அருகே தாளவிளை பகுதியை சேர்ந்த ஜோபின் (வயது 28) என்பதை கண்டுபிடித்தனர். உடனே போலீசார் அவரை தேடிய போது பாத்திமாநகர் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் உள்ளார் என்பதை கூறினார்கள். அங்கு சென்று மடக்கி கைது செய்தனர்.
ஜோபினிடம் நடத்திய விசாரணையில், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதை ஒப்பு கொண்டார். தனது 2 சகோதரிகளின் திருமணத்துக்காக அதிக கடன் வாங்கியதாகவும், இந்த கடனை அடைக்க திருட முயன்றதாகவும் போலீசாரிடம் கூறினார்கள். கைதான ஜோபின் மீது ஏற்கனவே இருசக்கர வாகன திருட்டு வழக்கு ஒன்றும் உள்ளது.












Click it and Unblock the Notifications