கன்னியாகுமரியில் புறப்பட்ட 'முத்தமிழ்த் தேர்'.. முரசு கொட்டிய 4 அமைச்சர்கள்! டிச.4 வரை நான்-ஸ்டாப்!
கன்னியாகுமரி: கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ''முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தியை'' கன்னியாகுமரியில் அமைச்சர்கள் பெரியகருப்பன், அன்பில் மகேஸ், மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முரசு கொட்டி துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது;

''கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாட முதலமைச்சர் ஸ்டாலினால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டன. அதில், "எழுத்தாளர்-கலைஞர்" குழு, சார்பில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு கலைஞரின் பன்முகத்தன்மையினை எடுத்து செல்லும் வகையில், "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி தயார் செய்து இன்று துவக்கிவைக்கப்பட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்த வாகனமானது "எழுத்தே எனது மூச்சு, எழுதுவதே எனது தினப்பழக்கம்" என்று முழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் பயன்படுத்திய பேனா வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறத்தில் கலைஞரின் பன்முகத்தன்மையினை விளக்கும் புகைப்படங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கலைஞரின் சிறப்புகளை விளக்கும் குறும்படமும் தொடர்ந்து திரையிடும் வகையில் ஒளித்திரையும் (LED WALL) அமைக்கப்பட்டுள்ளது.
பேனா வடிவிலான இந்த வானகத்தின் பின்புறம் இயந்திரத்தினால் திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலங்கார ஊர்தியினை பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் சென்று பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், வானத்தின் உள்ளே, கலைஞரின் கோபலபுர இல்ல உள் அமைப்பு தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே அஞ்சுகம் அம்மாள் அவர்களில் உருவச்சிலையும் அதன் அருகில் முத்தமிழறிஞர் அவர்கள் இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற உருவச்சிலையும், அவர் பயன்படுத்திய நூலகத்தின் மாதிரி வடிவமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் நின்று பொதுமக்கள் Selfi எடுத்துக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எழுத்துக்களுக்கு வடிவம் கொடுக்கும் அவரது படைப்புகளும், அவரது பன்முகத் தோற்றத்தினை விளக்கும் ஒலி - ஒளி அமைப்பும் உருவக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கலைஞரின் எழுத்துகளால் உயிர்ப்பெற்ற கவிதை, கட்டுரை, புதினங்கள், காப்பியங்கள் போன்றவற்றை கைப்பேசி வாயிலாக இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் QR Code Scan செய்து அறிந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தின் பாதுகாப்பிற்காக நான்கு புறமும், உள்பகுதியிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுநர் அறையில் வாகனத்தினை இயக்கும் போது நான்கு பக்கங்களும் தெரியும் வகையில் திரை அமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்ட இந்த அலங்கார ஊர்தியானது திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக 30 மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு 04.12.2023 அன்று சென்னை வந்தடையும். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிடவுள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தியினை தெரிவித்துக் கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications