உப்புமாவில் விஷம்.. பேராசிரியை மனைவியை கொன்ற கொடூர கணவர்.. அதிர்ந்து நிற்கும் குமரி!
உப்புமாவில் விஷம் வைத்து பேராசிரியை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

கன்னியாகுமரி: உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குமரி மாவட்டத்தையே உலுக்கி உள்ளது.
கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் திவ்யா சில்வஸ்டர். 29 வயதாகிறது. கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியையாக திவ்யா வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்பு திவ்யாவுக்கும், பெல்லார்மின் என்பவருக்கும் கல்யாணம் நடந்தது. பெல்லார்மின்னும் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினியங் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

தகராறு
கல்யாணம் ஆகி 2 மாசம்தான் இருவரும் சந்தோஷமாக இருந்தனர். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக தினந்தோறும் சண்டை, தகராறுமாகவே வாழ்க்கை போய் இருக்கிறது. இந்நிலையில், திவ்யா நேற்று கல்லூரிக்கு வழக்கம்போல் டூ விலரில் கிளம்பி சென்றார். சடையங்கால் பகுதி அருகே சென்றபோது திவ்யாவுக்கு திடீரென மயக்கம் வந்தது.

தீவிர சிகிச்சை
இதையடுத்து வண்டியை நிறுத்திவிட்டு, அங்கிருந்தவர்களிடம் மயக்கம் வருவதாக சொல்லி உள்ளார். உடனே பொதுமக்களும் ஒரு ஆம்புலன்ஸ் வரவழைத்து திவ்யாவை சுவாமியார்மடத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

விசாரணை
இதற்குள் திவ்யா இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், விஷம் வைத்து அவரை கொன்று விட்டதாகவும் ஒரு தகவல் பரவ ஆரம்பித்தது. இதையடுத்து போலீசார் விரைந்து விசாரணையில் ஈடுபட்டனர். பிறகு திவ்யாவின் தந்தையும் ஒரு புகார் மனு அளிக்கவும் அதன் பேரில் கணவர் பெல்லார்மின் குடும்பத்தினரிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

உப்புமா
அப்போதுதான் திவ்யா வீட்டு நாய் உப்புமா சாப்பிட்டு இறந்து கிடப்பதாக போலீசாருக்கு மற்றொரு தகவலும் வந்தது. இதனால் திவ்யாவும் உப்புமா சாப்பிட்டிருக்கலாம் என்றும், அந்த உப்புமாவில் விஷம் கலந்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்தனர்.

கைது
கணவர் பெல்லார்மின்னிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், திவ்யா சாப்பிட்ட உப்புமாவில் விஷம் கலந்ததாக ஒப்புக் கொண்டு வாக்குமூலமும் தந்துள்ளார். இதையடுத்து கணவர் உட்பட மாமியார், மாமனாரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications