ஆளுநரை கண்டு திமுகவுக்கு பயமெல்லாம் இல்லை! ஆனால்..காரணம் இருக்கு! ஓபனாகப் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ்!
கன்னியாகுமரி : எங்களுக்கு ஆளுநரை கண்டு பயம் ஒன்றும் இல்லை ஆனால் ஜனநாயக அமைப்பை சிதைத்து விட கூடாது என்பது தான் திமுகவின் கரிசனம் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர் என் ரவிக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அரசு சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது.
மேலும் பல்கலைக் கழக நிகழ்வுகளில் வேந்தர் என்ற முறையில் பங்கேற்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சிகளில் சனாதானம் குறித்து பேசியது தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநருக்கு எதிராக களமிறங்கியுள்ளன.

ஆளுநர் ஆர் என் ரவி
அதே நேரத்தில் ஆளுநரின் செயல்பாடுகள் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. மாநில சுயாட்சியை கேள்விக்குறியாக்குகிறது எனவும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல்தர இழுத்தடிப்பது அரசியல்சாசனம் வழங்காத பல்கலைக்கழக வேந்தர் என்ற பதவியின் மூலம் அரசியல் செய்வது என்பதெல்லாம் ஆளுநரின் பதவிக்கு அழகல்ல என திமுகவும் ஆளுநரை விமர்சித்து வருகிறது.

மனோ தங்கராஜ்
எங்களுக்கு ஆளுநரைக் கண்டு பயம் ஒன்றும் இல்லை ஆனால் ஜனநாயக அமைப்பை சிதைத்து விட கூடாது என்பது தான் திமுகவின் கரிசனம் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," ஆளுநர் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ஆனால் சிலர் அந்த மாண்பை மீறி வருகிறார்கள் , தமிழக அரசுக்கு யாராலும் நெருக்கடி கொடுக்க முடியாது.

அரசுக்கு நெருக்கடி
இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நெருக்கடி என நினைப்பது கானல் நீரை கண்டு மகிழ்வதை போன்றது ,பாஜகவை மக்கள் ஒருபோதும் ஏற்றுகொள்ள மாட்டார்கள். பாஜகவின் தமிழ் மொழிக்கான போராட்டம் என்பது ஒரு மாயை இது ஒரு கபட நாடகம். கடவுள் திரிணாமூல் அரசு இருப்பதை விரும்பவில்லை அதனால் தான் மேற்கு வங்கத்தில் பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டது என பிரதமர் மோடி அப்போது கூறினார் இப்போது குஜராத் பாலம் விபத்து ஏற்பட்டுள்ளது.

இது கடவுளின் செயல்?
தேர்தல் வரப்போகிறது இது கடவுளின் செயல் என ஏற்றுக்கொள்வாரா ?. திராவிட இயக்கங்கள் காரணமாக தான் தமிழகம் மற்ற மாநிலங்களை விட அதிக வளர்ச்சி அடைந்து உள்ளது. எங்களுக்கு என்னவோ கவர்னரை கண்டு பயம் ஒன்றும் இல்லை. ஆனால் ஜனநாயக அமைப்பை சிதைத்து விட கூடாது என்பது தான் திமுகவின் கரிசனம் என கூறினார்.












Click it and Unblock the Notifications