நாளுக்கு நாள் கட்டியேறும் கூட்டம்; Branch office அமைத்த அமைச்சர்; எட்டிக்கூட பார்க்காத மாஜி!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான மனோ தங்கராஜ் தனது புதிய கிளை அலுவலகத்தை நாகர்கோவிலில் திறந்திருக்கிறார்.
நாளுக்கு நாள் தன்னை பார்க்க வரும் விசிட்டர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் இந்த புதிய ஏற்பாட்டை அவர் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் இன்றும் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும்!
அமைச்சரின் புதிய அலுவலக திறப்பு விழாவில் கூட்டணிக் கட்சி முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்ட நிலையில் மாஜி அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான சுரேஷ்ராஜன் திரும்பிக்கூட பார்க்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஐ.டி. அமைச்சர்
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கன்னியாகுமரி மாவட்டத்திலேயே தங்கி மழைவெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இடையே ஓரிரு நாட்கள் மட்டும் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கவும், துறை ரீதியான மீட்டிங்கில் கலந்துகொள்ளவும் சென்னை சென்று திரும்பினார்.
விசிட்டர்ஸ்
பெரும்பாலான நேரம் அவர் மாவட்டத்திலேயே இருப்பதால் துறை ரீதியாக சந்திக்க விரும்பும் மென்பொருள் நிறுவன பிரமுகர்கள் சிலர் அமைச்சரின் ஊருக்கே படையெடுக்க தொடங்கியிருக்கின்றனர். கருங்கல் என்ற ஊரில் ஏற்கனவே அமைச்சரின் அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில், மாவட்ட தலைநகரான நாகர்கோவிலிலும் புதிய கிளை அலுவலகத்தை அண்மையில் திறந்துள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ்.
இரண்டு அலுவலகம்
கருங்கல் அலுவலகத்தை கட்சி அலுவலகமாகவும், நாகர்கோவில் அலுவலகத்தை அமைச்சர் என்கிற முறையில் மக்களை சந்திக்கவும், துறை ரீதியான வி.ஐ.பி.க்களை சந்திக்கவும் பயன்படுத்திக்கொள்ள மனோ தங்கராஜ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே கம்யூனிஸ்ட், காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலர் நாகர்கோவிலில் திறக்கப்பட்டுள்ள அமைச்சர் அலுவலகத்துக்கு வந்து சென்ற நிலையில், முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான சுரேஷ்ராஜன் அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லையாம்.
எதிரும் புதிரும்
ஏற்கனவே அமைச்சர் மனோதங்கராஜூம், சுரேஷ்ராஜனும் எதிரும் புதிருமாக மாவட்டத்தில் அரசியல் செய்து வரும் நிலையில், இந்த புதிய அலுவலகம் குமரி திமுகவில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இதனிடையே அவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் அதிகாரப் போட்டியில் அதிகாரிகள் நிலைமை தான் திண்டாட்டமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.