நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்
கன்னியாகுமரி: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் பாஜகவின் சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் காந்திக்கு வயது முதிர்வை காரணம் காட்டி வாய்ப்பு மறுக்கப்படலாம் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனால் காந்தி கலக்கத்தில் இருக்கிறாராம் காந்தி.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் களம் காண உள்ள பாஜக, தமிழகம் முழுவதும் தங்களுக்கு சாதகமான 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நேரடியாக போட்டியிடும் முடிவு செய்து அதற்கான காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறது. மேலும் தங்களுக்கு சாதகமாக உள்ள தொகுதிகளை அடையாளம் காணும் பணியை பாஜகவின் தமிழக மூத்த நிர்வாகிகள் வசம் ஒப்படைத்து, அதை இறுதி செய்யும் வழியிலும் பாஜக தலைமை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பாஜக வேட்பாளர் தேர்வு
அதோடு எந்த தொகுதியில் யாருக்கு செல்வாக்கு உள்ளது, மக்கள் பணியில் யார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர், பாஜகவின் கொள்கைகளை அடிமட்டம் வரை கொண்டு சென்று களத்தில் இறங்கி வேலை பார்த்தவர்கள் யார் என வேட்பாளர்களை அடையாளம் காணும் முயற்சியிலும் பாஜக தலைமை முனைப்பு காட்டி வருகிறது. இந்த முறை கிடைக்கும் தொகுதிகளில் அதிகபட்சமாக வெற்றி பெற்று சட்டமன்றத்தில் பாஜகவின் குரலை எதிர்க்கட்சி என்ற ரேஞ்சுக்கு ஒலிக்க வைக்க வேண்டும் என பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
இதனால் வேட்பாளர் தேர்வு விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது பாஜக. டெல்லி தலைமையோடு தங்களுக்கு உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி வரும் தேர்தலில் பாஜகவில் சீட் வாங்கிவிடலாம் என்ற கனவோடு வலம் வரும் பலருக்கும் பாஜக டெல்லி தலைமையின் இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதாம். மாநில மற்றும் டெல்லி தலைமையோடு தங்களுக்கு இருக்கும் நெருக்கத்தை புதுப்பித்து, அதை சீட்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பல சீனியர்களுக்கும் பாஜகவின் இந்த முடிவு ஏமாற்றத்தை தான் தந்திருக்கிறது.
காந்திக்கு வாய்ப்பு மறுப்பு
அந்த வகையில் பாஜகவின் நாகர்கோவில் தொகுதி சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் காந்திக்கு வயது முதிர்வை காரணம் காட்டி இந்த முறை வாய்ப்பு மறுக்கப்படலாம் என நம்பகமான தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் சீட்டிங் எம்எல்ஏ காந்தி கலக்கத்தில் இருக்கிறாராம். நாகர்கோவில் தொகுதியில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனை தோற்கடித்து பாஜகவிற்கு வரலாற்று வெற்றியை பெற்று தந்தவர் காந்தி.
அதனால் வேட்பாளர் தேர்வு பட்டியலில் தன்னுடைய பெயர் கண்டிப்பாக இடம்பெரும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார் காந்தி. மேலும் பிரதமர் மோடியிடம் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது, அதோடு டெல்லியில் உள்ள பல முக்கிய பாஜக தலைவர்களுடன் நேரடி நெருக்கம் கொண்டவர் என்பதால் காந்திக்கு இந்த முறை வாய்ப்பு உறுதியென நம்பிக்கையோடு தெரிவிக்கிறார்கள் எம்எல்ஏ காந்தியின் ஆதரவாளர்கள். ஆனால் டெல்லி பாஜக தலைகளிடம் தனக்கான சீட்டை உறுதி செய்வதற்காக அவர்களை சந்திக்க எம்எல்ஏ காந்தி எடுத்த முயற்சிகள் அத்தனையும் வேஸ்ட் தான் என்றும், எம்எல்ஏ காந்தியை சந்திப்பதையே பல முன்னணி தலைவர்கள் தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது.
டைம் டு ரிட்டைர்மென்ட்
காந்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் அவரின் ஆதரவாளர்கள் உள்ளடி வேலை செய்வார்களோ என பயந்து நாகர்கோவில் தொகுதியை அதிமுகவிற்கு தள்ளி விடவும் பாஜக நினைத்துக் கொண்டிருப்பதாகவும் ஒரு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் பாஜகவிற்கு செல்வாக்கு அதிகம் உள்ள கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்த முறை தங்களது செல்வாக்கை அதிக பலத்தோடு நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயம் பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது.
அதனால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள வேட்பாளர்களை மட்டுமே களத்தில் இறக்கவும் பாஜக தீர்க்கமாக முடிவு செய்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக காந்தி நாகர்கோவில் தொகுதி எம்எல்ஏவாக இருந்தும் நாகர்கோவிலில் பெரிய அளவில் பாஜகவை வளர்ப்பதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபடவில்லை என்றே பாஜக தலைமையும் நினைக்கிறது.
அதோடு வயது மூப்பையும் காரணம் காட்டி அவருக்கான வாய்ப்பை இந்த முறை பாஜக மறுத்து விடும் என நம்பகமான தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் இப்பொழுதே கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவின் நிலைப்பாடு அதன் வெற்றிக்கு எந்த வகையில் வழிவகுக்கும் என்பதை பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் எதிர் முகாமும் உன்னிப்போடு கவனித்து வருகின்றன.
-சிறப்பு நிருபர்












Click it and Unblock the Notifications