தாம்பரம்-நாகர்கோவில் தினசரி ரயில்.. கன்னியாகுமரி- நாகர்கோவில் 3-வது ரயில் பாதை.. விஜய் வசந்த் கோரிக்கை
கன்னியாகுமரி: காலி சரக்கு ரயில்கள் செல்ல கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே 3-வது ரயில் பாதை அமைக்க வேண்டும், மங்களூர்-திருவனந்தபுரம் ரயிலை கன்னியாகுமரி வரையும், ஹவுரா-திருச்சி ரயிலை கன்னியாகுமரி வரையும், நெல்லை வந்தேபாரத் ரயிலை நாகர்கோவில் வரையும் நீட்டிப்பு செய்ய வேண்டும். தாம்பரம்-நாகர்கோவில், ராமேசுவரம்-கன்னியாகுமரி ரயில்களை தினசரி சேவையாக மாற்ற வேண்டும் என்று கன்னியாகுமரி நாடாளுமன்ற எம்.பி. விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற எம்.பி. விஜய் வசந்த், மத்திய ரயில்வேத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார். அவற்றின் விவரங்களை பார்ப்போம்.. "நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம்-வேளாங்கண்ணி வாரந்திர ரயில், கன்னியாகுமரி-ஹைதராபாத் தினசரி விரைவு ரயில் ஆகிய புதிய ரயில்களை இயக்க வேண்டும். புதியதாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள சென்னை அம்ரித் பாரத் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.

புனலூர்-மதுரை ரயிலை காரைக்கால் வரையும், மங்களூர்-திருவனந்தபுரம் ரயிலை கன்னியாகுமரி வரையும், ஹவுரா-திருச்சி ரயிலை கன்னியாகுமரி வரையும், நெல்லை வந்தேபாரத் ரயிலை நாகர்கோவில் வரையும் நீட்டிப்பு செய்ய வேண்டும். தாம்பரம்-நாகர்கோவில், ராமேசுவரம்-கன்னியாகுமரி ரயில்களை தினசரி சேவையாக மாற்ற வேண்டும். காந்திதாம் விரைவு ரயில் மற்றும் ஜாம்நகர் ரயில் குழித்துறையிலும், புனலூர்-மதுரை ரயில் பள்ளியாடியிலும், திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி இரணியலிலும் நின்று செல்ல வேண்டும்.
இரட்டை ரயில் பாதை பணிகளை துரிதப்படுத்த வேண்டும். கன்னியாகுமரியில் மின்சார லோகோ ஷெட், நாகர்கோவில் டவுன் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கு செல்ல இரண்டாவது நுழைவு வாயில், நாகர்கோவில் டவுன், இரணியல் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்களில் கூடுதல் நடைமேடைகள், மோசமான நிலையில் காணப்படும் குழித்துறை ரயில் நிலையம் செல்லும் சாலையை செப்பனிடுதல், மழை காலங்களில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்படுவதை தடுக்க தகுந்த நடவடிக்கைகள், பயணிகள் வசதி கருதி ரயில் நிலையங்களின் மேம்பாடு ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
ராமேசுவரம்-தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி கடற்கரை ரயில் பாதை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை நடைமுறைபடுத்த வேண்டும். அது போன்று அறிவிக்கப்பட்டுள்ள அங்கமாலி-எருமேலி-விழிஞ்ஞம் ரயில் பாதையின் ஒரு பகுதியை கன்னியாகுமரி மாவட்டம் நெட்டா-குலசேகரம்-பூதப்பாண்டி வழியாக ஆரல்வாய்மொழி சென்றடையும் விதமாக நீட்டிப்பதற்கு ஆய்வு நடத்த வேண்டும். அதுபோன்று காலி சரக்கு ரயில்கள் செல்ல கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே 3-வது ரயில் பாதை அமைக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications