கன்னியாகுமரியில் தங்க கட்டிகளுடன் எஸ்கேப்.. நாகர்கோவில் டூ கொல்கத்தா.. தரமான சம்பவம் செய்த போலீஸ்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நகை பட்டறையில் இருந்து 38.5 பவுன் தங்கக்கட்டிகளுடன் வடமாநில தொழிலாளி மேற்கு வங்க மாநிலத்திற்கு எஸ்கேப் ஆனார். வேலை பார்த்த கடையில் நம்பிக்கையை ஏற்படுத்த தங்க கட்டிகளை வடமாநில வாலிபர் திருடி சென்ற சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்தனர். விசாரணையில் மேற்கு வங்கம் சென்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தங்க கட்டிகளுடன் வடமாநில தொழிலாளியை கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் ஆசாரிமார் தெருவை சேர்ந்த 52 வயதாகும் கணேசன் என்பவர் அதேபகுதியில் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இங்கு மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த 32 வயதாகும் சுபாஷ் மேத்தா என்பவர் பணிபுரிந்து வந்தார். அண்மையில் ஒரு சில வாரத்துக்கு முன்பு தொழில் விஷயமாக 38.5 பவுன் தங்க கட்டிகளை சுபாஷ் மேத்தாவிடம் கணேசன் கொடுத்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

ஆனால் சுபாஷ் மேத்தா தங்க கட்டிகளுடன் சென்றவர் திடீரென காணாமல் போனார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றாரா? என கணேசன் விசாரித்த போது சுபாஷ்மேத்தா அங்கு செல்லவில்லை என்பதும், நகை கட்டிகளுடன் மாயமானதும் தெரியவந்தது. இதனை அறிந்த நகைப்பட்டறை உரிமையாளர் கணேசன் அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து நடந்த சம்பவம் தொடர்பாக புகாரக எழுதி நாகர்கோவில் கோட்டார் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாஷ் மேத்தாவை தேடி வந்தார்கள். இதனிடையே நாகர்கோவில் சுபாஷ் மேத்தாவை பிடிக்க டிஎஸ்பி லலித்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. வேலை பார்த்த இடத்தில் கைவரிசை காட்டி விட்டு சொந்த மாநிலத்திற்கு சுபாஷ் மேத்தா தப்பினாரா? அல்லது வேறு இடத்திற்கு சென்று தலைமறைவாக இருக்கிறாரா? என்ற ரீதியில் தேடும் பணி நடந்தது.
ஒரு கட்டத்தில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், அவர் குஜராத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். ஆனால் அவர் அங்கு இல்லை. பின்னர் அவர் சொந்த ஊரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படையினர் மேற்கு வங்காளத்திற்கு சென்று அங்குள்ள போலீசாரின் உதவியுடன் தேடினார்கள்.
இதனை தொடர்ந்து சுபாஷ் மேத்தாவை அங்கு சுற்றி வளைத்து மடக்கினர். பிறகு அவரை கைது செய்து நாகர்கோவில் அழைத்து வருவதற்கான நடவடிக்கையை தனிப்படையினர் மேற்கொண்டுள்ளனர். 38.5 பவுன் தங்க கட்டிகளை அவரிடம் இருந்து பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்க்ள. வேலை பார்த்த கடையில் 38.5 பவுன் தங்க கட்டிகளை திருடி சென்று சிக்கிய வடமாநில இளைஞரிடம் தொடர்ந்து நகை குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications