ஒகி ஓராண்டு.. குமரிக் கடலோரம் முழுவதும் கடல் வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி..!
கன்னியாகுமரி: ஒகி புயல் தாக்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குளச்சலில் உயிர் நீத்த மீனவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி கடல் வீரர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் கழிந்து வருடம் நவம்பர் மாதம் ஏற்பட்ட ஒகி புயலின் கோர தாண்டவம் கன்னியாகுமரி மாவட்டத்தையே புரட்டி போட்டது. இந்த கோர தாண்டவத்தில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பிலான ரப்பர் தென்னை வாழை உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்லாயிரக்கணக்கான மின் கம்பங்கள் சேதமடைந்தன.
அதேப்போல் அரபிக்கடல் பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வந்த நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் "ஒகி" புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கி சிதைந்தது.
மீனவர்கள் தஞ்சம்
இதில் ஆயிரக் கணக்கான மீனவர்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா மற்றும் இலங்கை உள்ளிட்ட கடல் பகுதிகளில் தங்கள் விசைப்படகுகளில் தஞ்சமடைந்தனர். படகுகள் மூழ்கிய நிலையில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுமார் 2 நாட்கள் வரை கடலில் தத்தளித்து நீந்தி கரை சேர்ந்தனர்.
மீனவர்கள் மீட்கப்படவில்லை
இருப்பினும் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தூத்தூர், வள்ளவிளை, இனையம் புத்தன்துறை, முட்டம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நெல்லை, தூத்துகுடி மாவட்டம் மற்றும் வெளி மாநில மீனவர்கள் என 204-மீனவர்கள் மாயமானார்கள். இதில் 27-மீனவர்களின் உடல் மட்டுமே மீட்கப்பட்டது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 162-பேர் மாயமான நிலையில் 24-மீனவர்கள் உடல் மட்டுமே மீட்கப்பட்டது 138-மீனவர்கள் உடல் மீட்கப்படவில்லை.
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
இந்நிலையில் "ஓகி"புயல் ஏற்பட்டு ஓராண்டு நிறைவு தினமான இன்று புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடலில் மலர் தூவியும் போராடி கரை சேர்ந்தவர்களை கவுரவிக்கும் விதமாகவும் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் தெற்காசிய மீனவ தோழமை சார்பில் "கடல் வீரர்கள் தினம்"அனுசரிக்கப்பட்டது.
மீனவர்களுக்கு நிவாரணம்
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். ஓகி புயல் தாக்கி ஓராண்டு நிறைவு அடைந்தும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் இன்னும் கிடைக்கவில்லை என்று வேதனையுடன் கூறுகின்றனர் குமரி மக்கள்.