இளநீர், பழச்சாறு மட்டுமே.. 45 மணி நேர தியானத்துக்கு இடையே வேறு சாப்பாடே தொடாத பிரதமர் மோடி!
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்து வரும் பிரதமர் மோடி, நீர் ஆகாரங்களை மட்டுமே பருகி வருகிறார். நேற்று இரவும், இன்று காலையிலும் இளநீர், பழச்சாறு பருகியுள்ளார் பிரதமர் மோடி.
மக்களவைத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில், இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நேரத்தில் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார் பிரதமர் மோடி. கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி.

சுவாமி விவேகானந்தர் இதே விவேகானந்தர் பாறையில் கடந்த 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 3 நாட்கள் தியானம் செய்தார். அதே இடத்தில் தான் தற்போது விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ளது. அங்குள்ள விவேகானந்தர் தியான மண்டபத்தில் தான் பிரதமர் மோடி 3 நாள் தியானம் மேற்கொண்டு வருகிறார். எனவே இது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.
நேற்று மாலை விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு வந்த பிரதமர் மோடி அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து மாலை 6.45 மணியளவில் தியானத்தை தொடங்கினார். நேற்று மாலையில் இருந்து தியானம் செய்து வரும் அவர், நாளை பிற்பகல் வரை தொடர்ந்து 45 மணி நேரத்துக்கு மேல் தியானம் செய்ய இருக்கிறார்.
இதற்காக பிரதமர் மோடி தியானம் செய்யும் தியான மண்டபம் பகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தியான மண்டபத்திலும், அவர் தங்கும் அறையிலும் குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவேகானந்தர் பாறை பகுதியில் சிறப்பு மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.
பிரதமர் மோடி 45 மணி நேரம் தொடர்ச்சியாக தியானம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், 3 நாட்களும் அவர் இளநீர், திராட்சை உள்ளிட்ட பழங்களின் ஜூஸ் போன்ற நீர் ஆகாரங்களை மட்டுமே பருக இருக்கிறார். நேற்று மாலையும், இன்றும் இளநீர் மற்றும் பழச்சாறு ஆகியவற்றை பருகி உள்ளார் பிரதமர் மோடி.
நேற்று மாலை தொடங்கி, இரவு முழுவதும் தியான மண்டபத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார் பிரதமர். இன்று அதிகாலை வரை அவர் தொடர்ந்து கண் மூடி தியானம் செய்தபடி இருந்தார். பிரதமர் மோடி இன்று அதிகாலை 5 மணிக்கு தியான மண்டபத்தை விட்டு வெளியே வந்தார்.
விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து காலை 5:55 மணியளவில் சூரிய உதய காட்சிகளை கண்டு ரசித்தார். அங்கிருந்து கடல் அழகையும் ரசித்து பார்த்தார். அதன்பிறகு ஸ்ரீபாத மண்டபத்திற்கு சென்ற பிரதமர் மோடி, 10 நிமிடம் அங்கு அமர்ந்திருந்தார். பின்பு காலை 7:15 மணிக்கு மீண்டும் தியான மண்டபத்திற்குள் சென்று தனது இரண்டாவது நாள் தியானத்தை தொடங்கினார்.
சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்து தியானம் செய்யும் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் காவி உடையில் பிரதமர் மோடி, திருநீற்றுப் பட்டை அணிந்து, ருத்திராட்ச மாலையை கையில் வைத்தவாறு அமர்ந்து தியானம் செய்து வருகிறார்.
பிரதமர் மோடி வருகை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமமரி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
காந்தி மண்டபம், விவேகானந்தர் மண்டபம் உட்பட அனைத்து பகுதிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கடல் பகுதியில் கப்பற்படை கப்பலும் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. கடலோர காவல்படையினர் ரோந்து கப்பல்களில் விவேகானந்தர் பாறையைச் சுற்றி கண்காணித்து வருகின்றனர். கடலோர காவல்படையினர் கன்னியாகுமரி கடல் பகுதி முழுவதும் நவீன படகுகளில் ரோந்து சுற்றி வந்து கண்காணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications