தலையை எடுப்பேன்னு மிரட்டினவரை விட்டுட்டு.. படம் வச்சவர் மேல ஆக்ஷனா? - பொங்கிய பொன்னார்!
கன்னியாகுமரி : பாஜகவினரின் தலையை எடுப்பேன், விரலை வெட்டுவேன் என்று பேசியவர் குறித்து பாஜக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத தமிழக காவல்துறை, ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க முயன்ற பாஜக கவுன்சிலர் சுனில்குமார் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் நியாய விலை கடையில் அனுமதியின்றி பிரதமர் மோடியின் படத்தை வைத்ததாக பாஜக கவுன்சிலர் சுனில் குமார் உட்பட 3 பேர் மீது வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்கு பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறையினரின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என அவர் விமர்சித்துள்ளார்.
தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமணத்திற்கு அங்கீகாரம்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரபர உத்தரவு
மத்திய அரசு மானியம்
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கு மத்திய அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி உள்ளிட்டவை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பாஜக நிர்வாகிகள், தங்கள் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படங்களை வைத்து வருகின்றனர். இதற்கு ஆங்காங்கே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பிரதமர் மோடி படம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் 12வது வார்டு பாஜக கவுன்சிலர் சுனில் குமார், பிரதமர் மோடி படத்துடன் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்குள் புகுந்து, மோடி படத்தை சுவற்றில் ஆணி அடித்து பொருத்தி, அதற்கு வணக்கம் செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த வடசேரி போலீசார், பிரதமர் படம் என்பதால், கூட்டுறவு சங்கம் தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துவிட்டுச் சென்றுவிட்டனர்.
ஒவ்வொரு ரேஷன் கடையிலும்
பாஜக கவுன்சிலர் சுனில் குமார், ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படத்தை மாட்டியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மத்திய அரசின் மானியம் வேண்டும், பிரதமர் மோடியின் புகைப்படம் வேண்டாமா என சுனில் குமார் கேள்வி எழுப்பினார். மேலும், பிரதமர் மோடி படத்தை இவர்கள் அகற்றினால், நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து ரேஷன் கடைகளிலும் பிரதமர் மோடி படத்தை மாட்டுவேன் எனத் தெரிவித்தார் சுனில் குமார்.
வழக்குப்பதிவு
இந்நிலையில் நாகர்கோவில் எஸ்எம்ஆர்வி மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள நியாய விலைக் கடையில் அனுமதியின்றி பிரதமர் மோடியின் படத்தை மாட்டிய பாஜக கவுன்சிலர் சுனில் குமார் உள்ளிட்ட 3 பேர் மீது வடசேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாஜக கவுன்சிலரின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாஜக முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்.
ஒருதலைப்பட்சம்
பொன் ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாஜகவினரின் தலையை எடுப்பேன், விரலை வெட்டுவேன் என்று பொதுக்கூட்டத்தில் வன்முறைப் பேச்சை பேசியவர் குறித்து பாஜக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத தமிழக காவல்துறை, நியாய விலைக் கடையில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க முயன்ற பாஜக கவுன்சிலர் சுனில் குமார் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. காவல்துறையினரின் ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.