நீண்ட போராட்டம்,. என் நோக்கமே வித்தியாசமானது.. யாத்திரை பற்றி வெளிப்படையாக பேசிய ராகுல் காந்தி
கன்னியாகுமரி: இந்திய ஒற்றுமை பயணத்தை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று தொடங்கினார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லும் இந்த பயணத்தில் நாட்டு மக்களிடையே ராகுல் காந்தி உரையாடுகிறார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காங்கிரஸ் கட்சியின் போராட்டம் குறித்து கூறியுள்ளார்.
தற்போது நடைபெறும் போராட்டம் ஒரு கட்சிக்கும் மற்றொரு கட்சிக்கும் இடையிலானதல்ல என்றும், இது இந்திய கட்டமைப்புக்கும் அதற்கு எதிராக நிற்பவர்களுக்கும் இடையிலானது என்று கூறியுள்ளார்.

நடைப்பயணம்
'பாரத் ஜடோ யாத்ரா' எனும் பெயரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல் காந்தி நேற்று கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த பயணம் கேரளா,கர்நாடகா, தெலங்கானா வழியாக காஷ்மீர் வரை செல்கிறது. 12 மாநிலங்கள் வழியாக சுமார் 3,500 கிமீ தொலைவிற்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொள்கிறார். மேலும், இவருடன் 118 இளைஞர்கள் தொடக்கம் முதல் முடிவு வரை பயணிக்கின்றனர். இந்நிலையில், இன்று ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்த நடைப்பயணம் குறித்தும் குறித்தும் அரசியல் பயணம் குறித்தும் பேசியிருந்தார்.

போராட்டம்
அவர் கூறியதாவது, "பாஜகவால் இந்தியாவின் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும். உதாரணமாக மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என அனைத்தையும் பாஜக எப்படி நடத்துகிறது என்பதை உங்களால் பார்க்க முடியும். தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் ஒரு கட்சிக்கும் மற்றொரு கட்சிக்கும் இடையிலானது அல்ல. இது ஒட்டுமொத்த இந்திய கட்டமைப்புக்கும் அதற்கு எதிராக நிற்பவர்களுக்கும் இடையிலானது.

பிரச்னை இல்லாத வாழ்க்கை
இந்த போராட்டம் மிகவும் எளிமையானது அல்ல. இது மிகவும் கடினமானது. இந்த போராட்டக்களத்தில் ஊடகங்கள் எதிர்க்கட்சிகளுடன் இல்லை. ஏனெனில் உங்களுடைய ஓனர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து அழுத்தம் வருவதை ஊடக நண்பர்களாகிய நீங்கள் விரும்புவதில்லை. நீங்கள் மட்டுமல்ல பலரும் பாஜகவை எதிர்க்க விரும்புவதில்லை. பாஜகவுடன் கைகோர்த்து பிரச்னை இல்லாத வாழ்க்கை வாழவே அவர்கள் விரும்புகின்றனர்.

போராட்ட வித்தியாசம்
ஆனால் துர்திஷ்டவசமாக இது என்னுடைய எண்ணமில்லை. நான் அப்படியான ஆள் கிடையாது. எனக்கான போராட்டம் என்பது இந்தியாவுக்கான சில யோசனைகளை உருவாக்குவதற்கானது. இதுதான் எனது போராட்டத்திற்கும் பிறரின் போராட்டத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசமாகும்" என்று கூறியுள்ளார். அதேபோல நாங்கள் ஏகபோக யோசனைக்கு எதிரானவர்களாக இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு வாக்கு அரசியலுக்காக இந்த நடைப்பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளதாக சில அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன.












Click it and Unblock the Notifications