கன்னியாகுமரி மாவட்டம் வரை எதிரொலிக்கும் யாஸ் புயல் தாக்கம்.. பெரும் காற்று, கன மழை! மரங்கள் சாய்ந்தன
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் சூறைக்காற்றுடன் இடைவிடாது பெய்யும் மழையால், பல இடங்களில் மரங்கள் வேரோடு பிடுங்கி விழுந்தன.
வங்கக் கடலில் உருவான, யாஸ் புயல், ஒடிசா, மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. இன்று பிற்பகல் ஒடிசாவில் புயல் கரையை கடக்கும்.
ஆனால் ஆயிரக்கணக்கான கி.மீ தொலைவிலுள்ள தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த புயலின் தாக்கம் இருக்கிறது.
யாஸ் கரையை கடப்பதற்கு முன்பும் பின்பும் 6 மணி நேரத்திற்கு கடும் தாக்கம்.. வானிலை மையம் எச்சரிக்கை
நெல்லையிலும் காற்று
நேற்று பிற்பகல் முதலே சூறைக்காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. காற்றின் தாக்கம் நெல்லை மாவட்டத்தின் கடலோர பகுதிகளிலும் இருந்தது. மரங்களை பிடுங்கி எறியும் வகையில், புயலே வந்தது போல காற்றின் வேகம் இருந்தது.
காரணம் என்ன
புயல், ஒடிசா அல்லது, மேற்கு வங்கம் நோக்கி நகரும்போதெல்லாம், கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றும், கன மழையும் பெய்வது வாடிக்கையானது என்கிறார்கள், வானிலை ஆய்வு நிபுணர்கள். ஏனென்றால், இங்குள்ள காற்றைத்தான், புயல் ஈர்க்கும். அதேபோலத்தான் யாஸ் புயல் காலத்திலும் நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பாதிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில், நேற்று பல இடங்களில் கன மழை பெய்தது. பேயன்குழியில் நுாற்றாண்டுகள் பழமையான ஆலமரம் சாய்ந்துள்ளது. பல பகுதிகளில் மரங்கள், பஸ் நிழற்குடைகள் சாய்ந்துள்ளன. நாற்றங்கால்கள், தோட்டப்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஏராளமான வாழைகள் வேரோடு சாய்ந்துள்ளன. கோட்டார் உள்ளிட்ட பல இடங்களில் வீடுகள் சில இடிந்தன. தாழ்வான பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
மின்சாரம்
கருங்கல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியகுளம், காக்கைகுளம், தாமரைகுளம் என மூன்று குளங்கள் நிரம்பி வழிந்து, 150க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மக்கள், வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு, பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர். இன்று காற்றின் வேகம் குறைந்துள்ளது. ஆனால் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.