''உனக்கு எவ்வளவு கொழுப்பு''.. அமைச்சர் மனோ தங்கராஜை ஒருமையில் சாடிய சீமான்!
கன்னியாகுமரி: அமைச்சர் மனோ தங்கராஜை மிக கடுமையான முறையில் ஒருமையில் சாடிய நாம் தமிழர் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான், எவ்வளவு நாளுக்கு ஆடுவீங்க என தாம் பார்க்கிறேன் என பேசியிருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை நாம் தமிழர் கட்சியின் ஆதிக்கம் சற்று ஓங்கியிருக்கக் கூடிய பகுதியாகும். நாம் தமிழர் கட்சிக்கு குமரி மாவட்டம் முழுவதும் கிளை வாரியாக நிர்வாகிகள் உள்ளதால் ஓட்டு வங்கிக்கும் குறைவில்லை. இந்தச் சூழலில் திமுக நிர்வாகியை கண்டித்து நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சீமான், அமைச்சர் மனோ தங்கராஜை ''பால் வியாபாரி'' என்றும், ''உனக்கு என்ன கொழுப்பு'' இருக்கும் எனவும் சாடினார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் தனது மகனுக்கு எம்.எல்.ஏ. சீட் வாங்கிவிடலாம் என துடித்துக் கொண்டிருக்கிறார் என்றும் அவரை பற்றிய எல்லா விவரமும் தனக்குத் தெரியும் எனவும் பேசிய சீமான், ஒரு கட்டத்தில் ஒருமையில் அட்டாக் செய்தார். ''நாகர்கோவிலை கெடுக்க வேறு யாரும் தேவையில்லைங்க, இந்த மனோ தங்கராஜூன்னு ஒரு பய போதும். நீயும் வாழ்நாள் முழுவதும் அமைச்சராகவே இருந்திடலாம்னு நினைக்கிற, உன் மகனுக்கு எம்.எல்.ஏ. சீட் வாங்கத் துடிக்கிற, நான் விட்ருவேன்னு மட்டும் நினைக்காதே. நில்லு பார்க்கலாம். ஆடு, இன்னும் எவ்வளவு நாளுக்கு ஆடுவீங்கன்னு பார்க்கிறேன்'' என மிக கடுமையான முறையில் ஒருமையில் சாடினார் சீமான்.
அதேபோல் பால் வியாபாரம் செய்தால் மட்டும் போதுமா, மாடுகள் எங்கே என வினவிய சீமான், மனோ தங்கராஜை பார்த்தால் மாடு எங்கே எனக் கேளுங்க என்றும் கூறினார். சீமானை பொறுத்தவரை கடந்த சில மாதங்களாகவே ஒருமையில் பேசுவதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜை இந்தளவுக்கு பேசிவிட்டார். இதற்கு பதிலடியாக சீமான் மீது வழக்குப் பதிய அமைச்சர் தரப்பு முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications