தோவாளையில் நடந்த இரட்டை கொலையில் திடீர் திருப்பம்... குற்றவாளிகள் கைது
Recommended Video
கன்னியாகுமரி: சொத்து பிரச்சினை காரணமாக, தோவாளையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்து என்ற மணிகண்டன் (50). இவர் தோவாளை மலர் சந்தையில் மொத்த பூ வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு கல்யாணி (35) என்ற மனைவியும் 10 ம் வகுப்பு படிக்கும் ராமலட்சுமி (15) என்ற மகளும் உள்ளார்கள்.
இந்நிலையில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பூ வியாபாரி வீட்டிற்குள் புகுந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் பூ வியாபாரி மற்றும் அவரது மனைவி மற்றும் மகளை கண்மூடிதனமாக வெட்டினார்கள். இதில் தலை, கை வயறு உட்பட பல இடங்களில் வெட்டுபட்ட முத்துவின் மனைவி கல்யாணி வீட்டிலேயே பரிதாபமாக பலியானார்.
பூ வியாபாரி உயிரிழப்பு
மேலும், பூ வியாபாரி முத்து மற்றும் அவரது மகள் 10 வகுப்பு படிக்கும் மாணவி ராமலட்சுமி ஆகியோர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கல்யாணியின் கணவர் முத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொலையாளி கைது
இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீஸார் விசாரனை நடத்தி வந்தனர். விசாரணையில் சொத்து தகராறில் கல்யாணியின் சகோதரர் சுடலையாண்டி கூலிப்படையை ஏவி மணிகண்டனையும், கல்யாணியையும் தீர்த்து கட்டியது தெரியவந்தது. போலீசார் இந்த கொலை சம்மந்தமாக முதலில் கோட்டாரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் சரண்
இதனையடுத்து, கூலிப்படையை சேர்ந்த ராஜ் குமார், அய்யப்பன், ஜெனீஸ், ராஜா ஆகியோர் நெல்லை கோர்ட்டில் சரணடைந்தனர். தலைமறைவாக இருந்த சுடலையாண்டி சென்னை தாம்பரம் கோர்ட்டில் சரணடைந்தான். இக்கொலை குறித்து சுடலையாண்டியின் கள்ளக்காதலி கோகிலவள்ளி (39) கொடுத்த வாக்கு மூலம் அளித்துள்ளார். அதன் படி, பணகுடியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவருக்கும் தனக்கும் கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளதாகவும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு கணவனை பிரிந்து வாழ்வதாகவும் தெரிவித்தார்.
சொத்து தகராறு
இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு முதல் சுடலையுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும் சுடலையாண்டியின் அக்கா தாணம்மாளின் மகன் இசக்கிராஜா தங்களது பூர்வீக சொத்து காரணமாக 6 லட்சம் கேட்டு தகராறு செய்ததால், தன்னுடன் வாழ்ந்து வந்த சொகுசு வீட்டினை விற்றத்தால், சுடலையாண்டியுடன் தகராறு ஏற்பட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்தே சொத்துக்காக சகோதரி என்று கூட பார்க்காமல் கல்யாணி குடும்பத்தையை கூலிப்படை ஏவி சுடலையாண்டி கொன்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் ஆஜர்
பரப்பரப்பான தோவாளை மலர் சந்தை அருகிலேயே அமைந்துள்ள தெருவில் மர்ம கும்பலால் ஒரு குடும்பமே வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில் சரணடைந்த சுடலையாண்டி, ராஜ்குமார், ராஜா, ஜெனீஸ், ஐயப்பன் ஆகிய 5 பேரையும் பூதப்பாண்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். இதனிடையே போலீசார் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்துள்ளனர்.