இந்த '3 நாட்கள்' டாஸ்மாக் இயங்காது.. தமிழக அரசு அதிரடி.. கன்னியாகுமரியில் ஹேப்பி
கன்னியாகுமரி: விநாயகர் சதுர்த்தி விழாயையொட்டி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதால், அடுத்த 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 5300 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்த நிலையில், அண்மையில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தற்போது தமிழகத்தில் 4,800 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த டாஸ்மாக் கடைகள் மூலம் தினசரி 100 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. பொதுவாக அரசு அறிவித்துள்ள கட்டாய விடுமுறை நாட்களில் மட்டும் மூடப்படும்.

அதே நேரம் மது அருந்திவிட்டு யாராவது பிரச்சனை செய்வார்கள் என்று கருதும் சமயங்களில் அரசு டாஸ்மாக் கடைகளை மூடுகிறது. தேர்தல் நேரங்களில் மூடப்படும். அதேபோல் பதற்றமான இடங்களில் கோவில் திருவிழாக்கள் நடைபெறும் போதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் அந்த வகையில் தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அடுத்த 3 நாட்கள் மூடப்பட உள்ளது.
இதனிடையே கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கூறுகையில், விநாயகர் சதுர்த்தி விழா கன்னியாகுமரி மாவட்டத்தில் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இந்த சிலைகள் விஜர்சனத்திற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இதனை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் ஊர்வலம் நடை பெறும் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை நாளை (22-ந் தேதி) முதல் 3 நாட்கள் செயல்படாது" இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
இதனிடையே தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 2ம் ஆகிய இரு தினங்களிலும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 28ம் தேதி இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான மிலாடி நபி கொண்டாடப்படதால் டாஸ்மாக் மூடப்படுகிறது.
இதேபோல் காந்தி ஜெயந்தி அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றும் டாஸ்மாக் மூடப்படுகிறது. இந்த நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தனியார் மதுக்கடைகளையும் மூட வேண்டும், மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications