வெளிநாட்டில் இருந்தபடி கண்காணிப்பு கேமராவில்.. ஊரில் அசிங்கப்பட்ட கன்னியாகுமரி சில்வண்டுகள்.. கைது
கன்னியாகுமரி: நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த சலீம் மஸ்கட்டில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக அண்மையில் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இவரது வீட்டில் ஆள் இல்லாததை நோட்டம் விட்டு கண்டுபிடித்த இரண்டு பேர் வீடு புகுந்து திருட முயன்றனர். ஆனால் வீட்டிற்கு சலீம் கண்காணிப்பு கேமரா வைத்திருந்தார். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்தபடி கண்காணிப்பு கேமராவில் பார்த்து திருடியவர்களை அவர் அண்மையில் விரட்டி அடித்தார். அங்கு திருடப்போன 2 பேர் போலீசில் சிக்கினர்.
நாகர்கோவில் கோட்டார் ரஹ்மத் கார்டன் பகுதியைச் சேர்ந்த 50 வயதாகும் சலீம் , இவரது மகன் மஸ்கட்டில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். சலீம் தனது மகனை பார்ப்பதற்காக கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் மஸ்கட்டுக்கு சென்றார். சலீம் தனது வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி இருக்கிறார். அந் கேமராவில் பதிவாகும் காட்சிகளை மட்டுமின்றி லைவாக அங்கு என்ன நடக்கிறது என்பதை பார்க்க முடியும். மேலும் சத்தம் போட்டால் அங்கு வீட்டில் உள்ளவர்களுக்கு தெளிவாக கேட்கும் வகையில் அந்த சிசிடிவி கேமரா இருக்கிறது. அந்த கேமராவை வெளிநாட்டில் உள்ள சலீம் தனத செல்போனில் நேரடியாக பார்க்கும் வசதியை ஏற்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில் சலீம் வீட்டில் யாரும் இல்லை. வெளியூர் போய்விட்டார்கள் என்பதை நோட்டமிட்டு கண்டுபிடித்த இரண்டு திருடர்கள், கடந்த டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவு நுழைந்துள்ளனர். வெளிநாட்டில் இருந்தபடி செல்போன் மூலம் தனது வீட்டை கண்காணித்து கொண்டிருந்த சலீமுக்கு, 2 மர்ம ஆசாமிகள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே வந்த சத்தம் கேட்டது. உடனே செல்போனில் அவர் பார்த்த போது, கம்பியுடன் வீட்டிற்குள் உலா வந்தனர். இதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
உடனே இதுபற்றி தனது பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு செல்போன் மூலம் சலீம் தகவல் கொடுத்தனர். அக்கம் பக்கத்தினர் சலீம் வீட்டை முற்றுகையிட்டு 'திருடன்...திருடன்...' என கூச்சலிட்டனர். இதனால் அச்சமடைந்த மர்ம ஆசாமிகள் பின்பக்கம் வழியாக தப்பி சென்றார்கள். இதுபற்றி தகவல் அறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
சலீம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் மர்ம ஆசாமிகளின் உருவம் தெளிவாக பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். மேலும் மர்ம நபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தற்போது சலீம் வீட்டின் அருகே ஒரு புதிய வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. அதில் வேலை பார்க்கும் 4 தொழிலாளர்கள் மற்றும் அங்கு சந்தேகத்தின் அடிப்படையில் சுற்றித்திரிந்த 3 பேர் என மொத்தம் 7 பேரை பிடித்து தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே வெளிநாட்டில் இருந்து சலீம் நேற்று நாகர்கோவில் வந்தார். அவரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் நகை, பணம் எதுவும் கொள்ளை போகவில்லை என்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் வீட்டில் திருட முயன்றது பணக்குடியை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் ஓட்டலில் ஊழியர்களாக வேலை பார்த்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களை நேற்று போலீசார் பிடித்தனர். பின்னர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications