மகளிர் லோன் வாங்கிய கன்னியாகுமரி ஜெயராணி.. திடீரென செய்த காரியம்.. ஆடிப்போன சுய உதவிக்குழுவினர்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே நெடுவிளை பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவருடைய மனைவி ஜெயராணி, மகளின் திருமணத்திற்கு கடன் வாங்கினாராம்.. ஆனால் வெளிநாட்டில் வேலைக்கு சென்ற மகன், வேலை இழந்து ஊர் திரும்பி உள்ளார். இதனால் பணத்தை கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார் ஜெயராணி. இதனிடையே கடனை திரும்ப கேட்டு சுயஉதவிக்குழுவினர் தொந்தரவு கொடுத்தால், விரக்தி அடைந்த ஜெயராணி எடுத்த முடிவு அந்த பகுதி மக்களை ஆடிப்போக வைத்துள்ளது.
கடன் உண்மையில் மிக மோசமானது. கடனை கட்டி முடிக்கும் வரை பலருக்கு நிம்மதியே இருக்காது. நிலையான சம்பளம் வாங்கும் அரசு ஊழியரும் சரி, நாளை வேலை நிச்சயம் இல்லை என்று வாழும் சாமானிய மக்களும் சரி, கடனில் வீடு, பைக், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஸ்மார்ட் போன், ஏசி என்று ஏராளமான பொருட்களை வாங்குகிறார்கள். கடனை கட்ட முடியாத நிலை வரும் போது அவதிப்படுகிறார்கள். அதேபோல் திருமணத்திற்கு, அவசர மருத்துவ தேவைக்கு, செய்முறைக்கு என்று பெரிய சிக்கலான செலவுகள் வரும் போது கடன் வாங்குகிறார்கள். அந்த கடனை அடைக்க இன்னொரு கடன், அதனை அடைக்க இன்னொரு கடன் என்று வாங்குகிறார்கள். இப்படி வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவமானத்தில் நொந்து போகிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி பெண் ஒருவர் எடுத்த முடிவு பலரையும் கலங்க வைத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே நெடுவிளை பகுதியை சேர்ந்த பால்ராஜ், கூலித் தொழிலாளியாவார். இவருடைய மனைவி ஜெயராணி. பால்ராஜ் ஜெயராணி தம்பதிக்கு பெர்ஜின் ராஜேஷ் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கிறார்க்ள. 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயராணியின் பெர்ஜின் ராஜேஷ் வேலைக்காக வெளிநாடு சென்றார். இதனால் மகனின் உழைப்பை நம்பி மகளின் திருமணத்தை கடன் வாங்கி ஜெயராணி நல்லபடியாக நடத்தி முடித்துள்ளார். மகனின் வருமானத்தை நம்பி, சுய உதவி குழுவினரிடமும், வெளி நபர்களிடமும் வட்டிக்கு பணம் வாங்கினாராம். ஆனால் பெர்ஜின் ராஜேஷ் வேலை இழந்து சொந்த ஊர் திரும்பிவிட்டார். இதனால் போதிய வருமானமின்றி ஜெயராணி பரிதவித்துள்ளார்.
இதனால் ஜெயராணி வாங்கிய பணத்திற்கு வட்டி செலுத்த முடியவில்லை. மேலும் சுய உதவிக்குழுவினரின் பணத்தை முறையாக செலுத்த முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறாராம். ஒரு கட்டத்தில் வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கெடுத்துள்ளனர். கடந்த வாரம் சுய உதவிக்குழுவினரும் வீட்டை முற்றுகையிட்டு ஜெயராணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்களாம். இதுகுறித்து ஜெயராணி இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயராணி சம்பவத்தன்று இரவு விஷம் குடித்த நிலையில் வீட்டில் உயிருக்காக போராடியிருக்கிறார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகன் பெர்ஜின் ராஜேஷ், அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த ஜனவரி 28ம் தேதி ஜெயராணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications