கன்னியாகுமரி அருகே நள்ளிரவில் வீடு தேடி வந்த விருந்தாளி.. கதவை தட்டுவது யார்.. ஆடிப்போன தம்பதி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே பேச்சிப்பாறை மலையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் யானை, புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவது வழக்கம். இந்நிலையில் பேச்சிப்பாறை அருகே சிற்றாறு அடகாடு பழங்குடி குடியிருப்பு பகுதியில் முண்டன்காணி மற்றும் அவரது மனைவி வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் நள்ளிரவில் கதவை தட்டும் சத்தம் கேட்டுள்ளது. எட்டிப்பாரத்தால் காட்டு யானை தான் கதவு தட்டியிருக்கிறது.. அடுத்து நடந்ததை பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் எந்த அளவிற்கு கடலுக்கு பிரபலமோ, அதே அளவு காடுகளுக்கும் பேமஸ். அடர்ந்த வனப்பகுதியும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிறது. குலசேகரத்தில் இருந்து கூப்பிடும் தூரத்தில் தான் பேச்சிப்பாறை மலையோர பகுதி இருக்கிறது. இங்கு உள்ள குடியிருப்புகளில் யானை, புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகள் புகுந்துவிடும்.

குறிப்பாக வன விலங்குகள் வீடுகளில் வளர்க்கும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை தாக்குவதும் நடக்கிறது. மேலும் வனவிலங்குகள் தாக்குதலில் அவ்வப்போது மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இந்தநிலையில் பேச்சிப்பாறை அருகே காட்டு யானை ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.
பேச்சிப்பாறை அருகே சிற்றாறு அடகாடு பழங்குடி குடியிருப்பு பகுதியில் 65 வயதாகும் முண்டன்காணி என்பவர் மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவியுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை ஓங்கி ஓங்கி தட்டும் சத்தம் கேட்டுள்ளது.
இதனால் முண்டன்காணியும், அவரது மனைவியும் அதிர்ச்சி அடைந்த நிலையில் கண்விழித்து எழுந்த போது ஒரு காட்டு யானை வீட்டின் கதவை முட்டியது தெரிய வந்தது. இதனால் அச்சமடைந்த தம்பதி இருவரும் வீட்டின் முன்பக்க கதவைத் திறந்து வெளியே ஓடினார்கள். பின்னர் முண்டன்காணி, யானையை துரத்த முயன்றார்.
அப்போது யானை ஆவேசமடைந்து அவரை துரத்தியது. இதனால் முண்டன்காணி உயிர் பிழைக்க அந்த இடத்தில் இருந்து மனைவியுடன் மின்னல் வேகத்தில் ஓடி மறைவான இடத்திற்குள் சென்று தப்பினார். இதையடுத்து அந்த யானை அங்கிருந்து சென்று விட்டது. யானை தாக்கியதில் வீட்டின் கதவில் ஓட்டை ஏற்பட்டது. வீட்டின் கதவை காட்டு யானை சேதப்படுத்திய சம்பவம் பேச்சிப்பாறை பகுதி பழங்குடி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications