கன்னியாகுமரி மாப்பிள்ளை சார்.. மதுரை முருகேஸ்வரியும் 3 பெண்களும்.. மறக்கவே முடியாத சம்பவம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியில் எல்ஐசி ஏஜெண்டாக 55 வயது நபர் பணியாற்றி வருகிறார். இவர் இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேடியுள்ளார். ஆன்லைனில் திருமண வரன் தேடும் இணையதளத்தில் பதிவு செய்தார். இதை பார்த்து மதுரையைச் சேர்ந்த முருகேஸ்வரி திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். அவர் உள்பட மொத்தம் 4 பெண்கள் மாப்பிள்ளை பார்ப்பது போல் வந்துள்ளார்கள். வந்த பெண்கள் நான்கு பேரும் வீட்டில் செய்த காரியம், 2-வது திருமணத்துக்கு ஆசைப்பட்டவருக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது.
திருமணத்திற்கு வரன் தேடுபவர்களை குறி வைத்து மோசடி செய்வது என்பது தற்போது அதிகமாக நடக்கிறது. அதுவும் முன்பின் தெரியாதவர்கள் பலர், திருமண ஆசை வார்த்தை கூறி நகை, பணம் பறிப்பது அதிகரித்துள்ளது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இப்படிப்பட்ட மோசடிகளை அடிக்கடி தற்போது அரங்கேற்றி வருகிறார்கள். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த 55 வயது நபர் எல்.ஐ.சி. முகவராக இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, ஒரு மகன், 2 மகள்கள் இருக்கிறார்கள். எல்ஐசி முகவருக்கு அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த கருத்து வேறுபாடு காரணமாக மனைவி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.
தற்போது எல்.ஐ.சி. முகவரின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் உள்ளதாக கூறப்படுகிறது. அவரை கவனிக்க வேண்டும் என்பதற்காக எல்.ஐ.சி. முகவர் 2-வது திருமணம் செய்ய விரும்பி உள்ளார். இதற்காக ஆன்லைனில் திருமண வரன் தேடும் இணையதளத்தில் பதிவு செய்து வைத்துள்ளார். பொதுவாக இதுபோல் இரண்டாம் திருமணத்திற்கு பதிவு செய்வோரை குறிவைத்து ஏமாற்றுவதற்காக மோசடி கும்பல்கள் பல சுற்றி வருகின்றன. அந்தவகையில் ஒரு கும்பல் மதுரையில் இருந்து எல்ஐசி முகவருக்கு வலைவீசியதாக தெரிகிறது. அதன்படி எல்ஐசி முகவர் வெளியிட்ட விளம்பரத்தை பார்த்து, மதுரையை சேர்ந்த முருகேஸ்வரி என்ற பெண் எல்.ஐ.சி. முகவரை தொடர்பு கொண்டுள்ளார். மேலம் அவரை திருமணம் செய்ய விரும்புவதாக கூறினார். அத்துடன் குடும்பத்தினருடன் நேரில் பார்க்க வர விரும்புவதாக கூறினாராம்.
மாப்பிள்ளை பார்க்க வந்தனர்
இதையடுத்து முருகேஸ்வரி, அவரது தங்கை கார்த்திகையாயினி (28)மற்றும் முத்துலட்சுமி (45), போதும் பொண்ணு (43) ஆகிய 4 பேரும் எல்.ஐ.சி. முகவர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு எல்.ஐ.சி. முகவருடன் உறவினர்களும் இருந்தனர். அப்போது 2-வது திருமணம் செய்ய சம்மதித்தால், அந்த பெண்ணுக்கு கொடுக்க இருக்கும் தங்க வளையல்கள், மோதிரம் என 8 பவுன் நகைகளை எல்.ஐ.சி. முகவர் காண்பித்திருக்கிறார். இதனை மாப்பிள்ளை பார்க்க வந்த பெண்கள் உன்னிப்பாக கவனித்திருக்கிறார்
இதனை தொடர்ந்து அந்த நகைகளை அங்கிருந்த மேஜை டிராயரில் வைத்து விட்டு வந்தவர்களை உபசரிப்பதில் எல்.ஐ.சி. முகவர் தீவிரமாக இருந்தார். மாப்பிள்ளை பார்க்க வந்த 4 பெண்களும் இரவு அங்கிருந்து சென்று விட்டார்கள். இதையடுத்து மறுநாள் எல்.ஐ.சி. முகவர் மேஜையில் வைத்திருந்த நகைகளை பார்த்தபோது அவற்றை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது மகன், மகளிடம் கூறியிருக்கிறார்
ஒருவேளை, மாப்பிள்ளை பார்க்க வந்த பெண்கள் திருடியிருப்பார்களோ என்ற சந்தேகம் எல்.ஐ.சி. முகவருக்கு ஏற்பட்டது. உடனே அவர் முருகேஸ்வரியின் செல்போனை தொடர்பு கொண்டபோது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்திருக்கிறது. பிறகு முருகேஸ்வரியுடன் வந்த மற்றொரு பெண்ணுக்கு போன் செய்து கேட்டபோது, உங்களை அவளுக்கு பிடிக்கவில்லை, இதனால் அவள் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்றார். அத்துடன் மாயமான நகைகள் குறித்து கேட்டபோது அவர்கள் சரியாக பதில் கூறவே இல்லை.
இதுகுறித்து எல்.ஐ.சி. முகவர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை சேர்ந்த 4 பெண்களையும் பிடித்து விசாரித்தபோது அவர்கள்தான் நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து முருகேஸ்வரி, கார்த்திகையாயினி, முத்துலட்சுமி, போதும் பொண்ணு ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது வேறு ஏதேனும் திருட்டு வழக்குகள் உள்ளனவா? எனவும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாப்பிள்ளை பார்க்க வந்த அனைவரும் திருமணம் ஆனவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications