“வீலிங்கா செய்ற.. இந்தா புடி”.. இளைஞருக்கு ரூபாய் 23,500 அபராதம் விதித்த போலீசார்!
கன்னியாகுமரி : பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பைக்கில் 'வீலிங்’ செய்த சபரீஷ் என்ற இளைஞருக்கு போலீசார் ரூபாய் 23,500 அபராதம் விதித்துள்ளனர்.
சாலைகளில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசங்களை செய்து வருவது வழக்கமாகி விட்டது. விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை ஓட்டும் இளைஞர்கள் தாறுமாறான வேகத்தில் செல்வதுடன் முன் சக்கரத்தை தூக்கி 'வீலிங்’ செய்தபடி வாகனத்தை ஓட்டுகின்றனர்.

இதனை வீடியோ எடுத்து, சினிமா வசனங்கள், பாடல்களை இணைத்து வீடியோக்களையும் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்கின்றனர். சமூக வலைதளங்களில் இதுபோன்ற பைக் சாகச வீடியோக்கள் வைரலாக பரவி வருகின்றன.
இரு சக்கர வாகனங்களில் இளைஞர்கள் வீலிங் செய்வது மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பொது நலன் கருதி, சாலைகளில் பைக் சாகசம் செய்யும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரியில் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருசக்கர வாகனம் ஓட்டிய சபரீஷ் என்ற இளைஞருக்கு போலீசார் ரூபாய் 23,500 அபராதம் விதித்துள்ளனர்.
வாகன சோதனையின்போது பதிவு எண் பொருத்தப்படாதது, அதிக ஒலி எழுப்பும் சைலன்சருடன் இயக்குதல், வீலிங் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வருவது தெரிய வந்ததையடுத்து ரூபாய் 23,500 அபராதம் விதித்ததுடன் பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர்.
இது போன்று யாரும் பைக் வீலிங் செய்யக்கூடாது என்றும், இதனால் விபத்துகள் ஏற்படும். மற்ற வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு உண்டாகும். யாராவது வீலிங் செய்வது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications