கதிகலங்கும் கரூர்..8 திமுகவினர் கைது! செந்தில் பாலாஜி சகோதரர் வீடு சென்ற ஐடி அதிகாரிகள் மீது அட்டாக்
கரூர்: செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனைக்கு சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்ட நிலையில் இன்று திமுகவை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்து உள்ளார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை கரூர், கோவை, சென்னை, ஐதராபாத் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். அதேபோல் கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் ஐடி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் அரசு ஒப்பந்ததாரர்கள், உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை தொடங்கிய சோதனை 3 வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. செல்வாக்கு மிகுந்த தமிழக அமைச்சராக கருதப்படும் செந்தில் பாலாஜி வருமான வரித்துறையால் குறி வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெள்ளிக்கிழமை கரூரில் வருமான வரி சோதனையில் ஈடுபட சென்ற ஐடி அதிகாரிகளின் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. இதனால் ஐடி வரித்துறை அதிகாரிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.
வெள்ளி இரவு கரூர் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து திமுகவினர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் மேயர் அங்கு வந்ததால் சீல் அகற்றப்பட்டது. இருப்பினும் சோதனையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கரூரில் அச்சுறுத்தல் இருப்பதாக செய்திகள் வெளியாகின.
வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த புகாரை தொடர்ந்து கரூரில் வருமான வரி சோதனை நடைபெற்ற இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க சிஆர்பிஎப் வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய வருமான வரித்துறை சோதனை சில இடங்களில் முடிந்துவிட்ட நிலையில் 3 நாளாக இரவு பகல் பாராமல் மற்ற இடங்களில் தொடர்ந்து வருகிறது. வெள்ளிக்கிழமை சோதனையிட சென்ற பெண் அதிகாரி காயத்ரி, சுனில் குமார், பங்கஜ் குமார், கல்லா சீனிவாச ராவ் ஆகிய 4 வருமான வரித்துறை அதிகாரிகள் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
வருமான வரி சோதனைக்காக சென்ற தங்களை திமுகவினர் தாக்கியதாக கூறி காவல் நிலையத்தில் புகாரளித்து உள்ளனர். அதன் பேரில் கரூர் நகர காவல் நிலையத்தில் திமுகவினர் மீது, பணி செய்யவிடாமல் தடுத்தது, வாகனத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
அதேபோல் திமுகவினர் அளித்த புகாரின்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீதும் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட திமுகவினர் 8 பேரையும் காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications