கரூர் அரசு ஊழியருக்கு கடைசி நாளில் கண்டம்.. புரோமோசனுடன் கன்னிவாடி போக வேண்டியவர் கம்பி எண்ணுகிறார்
கரூர் : கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பேரூராட்சியில் செயல் அலுவலராக உள்ள ராஜகோபாலுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. அவர் பதவி உயர்வு பெற்று, திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சிக்கு பணி மாறுதலாக செல்ல இருந்தார். கடைசி நாளான நேற்று அலுவலகம் வந்த நிலையில் ராஜகோபால், போகும் போது செய்த சேட்டையால் இப்போது கம்பி எண்ணுகிறார்..
அரசு ஊழியர்கள் சிலர் பட்டா பெயர் மாற்றம் செய்ய, பத்திரம் பதிவு செய்ய, மின் இணைப்பு பெற, குடிநீர் வரி, சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய, விதவையர் தொகை பெற, சொத்து வரி நிர்ணயம் செய்ய என்று பல்வேறு அரசின் சேவைகளை பெற, லஞ்சம் கேட்பதாக புகார்கள் உள்ளது. அப்படி அரசின் சேவைகளை பெற லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை பிடிப்பதற்காகவே லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இருக்கிறது. இது தனித்துறையாகும். 'இது முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் வரும்.

இங்கு லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் குறித்து புகார் அளித்தால், அவர்கள் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை தந்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார்கள். பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். இப்படியான நடவடிக்கை கடந்த சில மாதங்களில் மட்டும் ஏராளமான அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரூரில் ஒரு அரசு ஊழியர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் லேட்டஸ்டாக சிக்கியுள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் பேரூராட்சி பூவம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் குமரேஷ். இவர் தனக்கு சொந்தமான 3 சென்ட் இடத்திற்கு சொத்து வரி நிர்ணயம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
அவரிடம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜகோபால், அலுவலக உதவியாளர் சிவக்குமார் ஆகியோர் குமரேசை தொடர்பு கொண்டு சொத்து வரி நிர்ணயம் செய்ய வேண்டுமானால் ரூ,17 ஆயிரம் லஞ்சம் கேட்டார்களாம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேஷ் இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து திருச்சி போலீசார் அறிவுறுத்தலின்பேரில், நேற்று ரசாயன பவுடர் தடவிய ரூ,17 ஆயிரத்தை ராஜகோபாலிடம், குமரேஷ் கொடுத்திருக்கிறார். அப்போது அங்கு மறைந்து இருந்த போலீசார், ராஜகோபால் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அலுவலக உதவியாளர் சிவக்குமார் ஆகியோரை கையும், களவுமாக பிடித்தார்கள். பின்னர் 2 பேரிடமும் அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து ராஜகோபால், சிவக்குமார் ஆகியோரை லஞ்ச ஓழிப்பு போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
லஞ்ச வழக்கில் கைதாகி உள்ள செயல் அலுவலர் ராஜகோபால் பதவி உயர்வு பெற்று, திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சிக்கு பணி மாறுதலாக செல்ல இருந்தார். இந்த நிலையில் கடைசி நாளான நேற்று அலுவலகம் வந்த நிலையில் ராஜகோபால் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். பதவி உயர்வு கிடைத்த அரசு ஊழியர், டிரான்ஸ்ஃபர் ஆகும் கடைசி நாளில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான சம்பவம் கரூர் மாவட்ட அரசு ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..












Click it and Unblock the Notifications