முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சேஸிங்.. மணல் கடத்திய லாரியை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தார்!
கரூர்: கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்திய லாரியை சுமார் 18 கி.மீ தூரம் காரில் துரத்திச் சென்று பிடித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
லாரியை மடக்கி, வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மணல் கடுத்தலை திமுக அரசு தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஆறுகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவது தொடர்ந்து வருகிறது. சட்டவிரோத மணல் திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை என்பது எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
கரூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்டவிரோத மணல் கொள்ளை அதிகளவில் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அண்மையில், திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் அமைத்த ஸ்பெஷல் டீம், மணல் கடத்தலில் ஈடுபட்ட 26 லாரிகளை மடக்கியது.
இந்நிலையில் இன்று கரூர் மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிக்காக காரில் சென்று கொண்டிருந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். மண்மங்கலம் அருகே மணல் கடத்தல் லாரியை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காரில் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலை செக் போஸ்ட்டில் முறைகேடாக மணல் கடத்திச் சென்ற லாரியை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், துரத்திச் சென்று தடுத்து நிறுத்தினார்.
அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் மணல் கடத்தல் சம்பவம் அப்பகுதியில் நடைபெறாததால் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீசில் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து அந்த லாரியை வேலாயுதம்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தார்.












Click it and Unblock the Notifications