செந்தில் பாலாஜி பதட்டமாக இருக்கிறார்.. கரூரில் ஈரோடு பாணியில் நடக்கும் சம்பவம்.. அண்ணாமலை பேட்டி
கரூர்: கரூரில் 10 ரூபாய் பாலாஜி என்று சொன்னவுடன் செருப்பு வீசப்பட்டது. செந்தில் பாலாஜி சிபிஐ விசாரணைக்கு செல்கிறார். கடந்த ஒரு வாரமாக பதட்டத்தில் இருக்கிறார். முதலில் சிபிஐ விசாரணை முடிந்து வரட்டும் என கரூரில் அண்ணாமலை பேட்டி அளித்தார். ஈரோடு தொகுதியில் நடந்தது போல, கரூரிலும் பொதுமக்களை அடைத்து வைப்பதற்காக உணவகங்கள் பெயரில் 60 முதல் 70 பட்டிகள் வரை தயார் நிலையில் உள்ளது குறித்து புகார் அளித்துள்ளோம் என்று அண்ணாமலை கூறினார்
கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் கூட்டணி கட்சியினருடன் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் அண்ணாமலை செய்தியாளர்களை பற்றி கூறுகையில், "கரூரில் திமுக அட்டூழியம் குறைய வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி-யும் ஒரு தலைபட்சமாக செயல்பட்டது அனைவருக்கும் தெரியும். கடந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் நடந்தது போல, கரூரிலும் பொதுமக்களை அடைத்து வைப்பதற்காக உணவகங்கள் பெயரில் 60 முதல் 70 பட்டிகள் வரை தயார் நிலையில் உள்ளது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மூலம் இதுகுறித்த புகாரினை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம்.
திமுக அலுவலகத்திற்கு போஸ்ட்மேன் போனால் கூட கூட்டணி வைப்பார்கள் போல, பெரிய கூட்டணி அமைத்தது போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட், விசிக பேச்சு வார்த்தையில் பிரச்சனை உள்ளது. அதைப் பற்றி பேசாமல் 24 மணி நேரமும் விஜய்க்கு அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் கூறியது போல பொதுமக்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆவணம் இருந்தால் மட்டும் எடுத்து செல்ல வேண்டும். 2021 தேர்தல் போலவே 2026லும் 36 நாட்கள் உள்ளது. ஜோதிமணிக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. தோல்வி பயத்தில் இருக்கிறார். 2022க்கு பிறகு ராகுல் காந்தி இதுவரை எத்தனை முறை தமிழ்நாடு வந்துள்ளார். தேர்தலுக்கு மட்டும் வருவது டூரிஸ்டர்கள் செய்யும் வேலை.
கரூர் சம்பவத்தின் போது அரசு மருத்துவமனைக்கு உதவி செய்வதற்காக முதலில் சென்றவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். ஆனால், செந்தில் பாலாஜி திமுக மருத்துவர் அணி என்று ஆம்புலன்ஸ்களை கூட்டிக்கொண்டு, நேரலையில் தொடர்ந்து விளம்பரம் செய்து கொண்டிருந்தார். விளாத்திகுளம் உடற் கூராய்வு ரிப்போர்ட் இதுவரை வரவில்லை. ஆனால், கரூர் சம்பவத்தில் உடனடியாக வழங்கப்பட்டது. கரூரில் 10 ரூபாய் பாலாஜி என்று சொன்னவுடன் செருப்பு வீசப்பட்டது. செந்தில் பாலாஜி சிபிஐ விசாரணைக்கு செல்கிறார். கடந்த ஒரு வாரமாக பதட்டத்தில் இருக்கிறார். முதலில் சிபிஐ விசாரணை முடிந்து வரட்டும்"இவ்வாறு அண்ணாமலை கூறினார்.












Click it and Unblock the Notifications