சங்கி பிரின்ஸ் பிரவீன் ராஜூக்கு அக்.13 வரை நீதிமன்ற காவல்.. நீதிபதி அதிரடி உத்தரவு!
கரூர்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் குறித்து இழிவாக பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி பிரவீன் ராஜை, அக்டோபர் 13 வரை நீதிமன்ற காவலில் வைக்க கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன் ராஜ் என்பவர் சமூக வலைதளத்தில் 'சங்கி பிரின்ஸ்' என்ற பெயரில் இயங்கி வருகிறார். இவர் அண்மையில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி குறித்து இழிவுபடுத்தும் வகையில் கருத்தை பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து, கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரை அடுத்து இன்று அதிகாலை 2 மணியளவில் பாஜக சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன் ராஜ் கரூர் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பிரவீன் ராஜ், கரூருக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த கைது நடவடிக்கைக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இன்னும் ஆறு மாதங்களில் தேர்தல் வர இருக்கும் நிலையில் இதுபோன்ற அரசியல் கைது திமுகவின் தோல்வி பயத்தை காட்டுகிறது என பாஜகவினர் விமர்சித்துள்ளனர்.

இதற்கிடையே, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி குறித்து இழிவாக எக்ஸ் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி பிரவீன் ராஜை, அக்டோபர் 13 வரை நீதிமன்ற காவலில் வைக்க கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுஜாதா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications