5 கி.மீ.க்கு பறந்த கொடி ; பூரண கும்ப மரியாதை; அசத்திய செந்தில்நாதன்; அகமகிழ்ந்த அண்ணாமலை!
கரூர்: நீண்ட நாட்களுக்கு பிறகு தனது சொந்த ஊரான கரூருக்கு வருகை தந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அங்கு கிடைத்த வரவேற்பு அவரே எதிர்பார்க்காத ஒன்று எனத் தெரிவிக்கப்படுகிறது.
கரூர் நகரில் திமுக கொடிகளுக்கு நடுவே பாஜக கொடியை பறக்கவிட்டு அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக அரசியல் ஆட்டத்தை வீரியமுடன் தொடங்கியிருக்கிறார், அவரால் ஒரு காலத்தில் ஓரங்கட்டப்பட்டவரும் கரூர் மாவட்ட பாஜக புதிய தலைவருமான வி.வி.செந்தில்நாதன்.
இதனிடையே கரூர் மாவட்ட மக்களை மிரட்டாமல் நாம் அரசியல் செய்ய வேண்டும் என சூசகமாக அமைச்சர் செந்தில்பாலாஜியை குறிப்பிட்டு அண்ணாமலை பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தலைவலி! உச்சம் தொடும் டெங்கு.. 6 ஆண்டுகளில் இதுதான் மோசம்.. தலைநகரில் 5270 பேருக்கு பாதிப்பு
சுற்றுப்பயணம்
பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டது முதல் கோவை, சென்னை என தமிழகம் முழுவதும் தொடர்ந்து சுற்றுப் பயணங்களிலேயே இருந்து வருகிறார் அண்ணாமலை. சொந்த ஊரான கரூருக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இன்று வருகை புரிந்த நிலையில், கரூர் மாவட்ட பாஜக புதிய தலைவரான வி.வி.செந்தில்நாதன் பிரம்மாண்ட முறையில் வரவேற்பு கொடுத்து அசத்திவிட்டார். பூரண கும்பமரியாதையுடன் வரவேற்பை ஏற்றுக்கொண்ட அண்ணாமலை இதனால் உற்சாகமடைந்தார்.
செந்தில்பாலாஜி
கரூர் மாவட்ட பாஜகவுக்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில்நாதனுக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் இடையே ஏற்கனவே அரசியல் முன் பகை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அரவக்குறிச்சி தொகுதியில் 2011-ம் ஆண்டு ஜெயலலிதாவால் சீட் கொடுக்கப்பட்டு அதிமுக சார்பில் போட்டியிட்டவர் தான் இந்த செந்தில்நாதன். ஆனால் செந்தில்பாலாஜியின் உள்ளடி அரசியல் காரணமாக அவர் தோல்வியை தழுவியதுடன் ஜெயலலிதாவிடமும் நெருங்க முடியாத சூழல் உருவாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
பாஜக கொடிகள்
தன்னை அரசியலில் இருந்து ஒழிக்க நினைத்த அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக பாஜக மாவட்டத் தலைவர் என்ற முறையிலும் மேலிடத்தின் கிரீன் சிக்னல் கிடைத்ததாலும் அதிரடி அரசியலை செந்தில்நாதன் முன்னெடுப்பார் எனத் தெரிகிறது. அந்த வகையில் கரூர் நகரில் திமுக கொடிகள் கட்டப்பட்டிருந்த நிலையில், போலீஸிடம் சிறிதும் விட்டுக்கொடுக்காமல் பாஜக கொடியையும் கட்டுவோம் முடிந்ததை பாருங்கள் எனக் கூறி கரூர் முழுவதும் பாஜக கொடியை பறக்கவிட்டு அண்ணாமலையின் பாராட்டை பெற்றிருக்கிறார்.
அண்ணாமலை பேச்சு
கரூர் மாவட்டத்தில் மக்களையும், விவசாயிகளையும் ஒரு சிலர் மிரட்டி அரசியல் செய்வது போல் இல்லாமல் மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என அண்ணாமலை பேசியது, செந்தில்பாலாஜியையும் அவரது ஆதரவாளர்களையும் மனதில் வைத்துத்தான் எனக்கூறப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் பாஜக வலிமையான கட்சியாக மாற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அதற்கேற்ப பாரபட்சமின்றி கட்சிப்பணிகளில் அனைவரும் ஈடுபட வேண்டும் எனவும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.